சென்னை தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் ரகளை

அஜீத் நடித்த ஏகன் படம் தீபாவளியையொட்டி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
சென்னை ஆல்பட் தியேட்டரிலும் ஏகன் திரையிடப்பட்டுள்ளது. படத்தைக் காண பெரும் திரளான ரசிகர்கள் வந்திருந்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒவ்வொரு பாடல் காட்சிக்கும் ஒன்ஸ்மோர் கேட்டு அமர்க்களம் செய்தனர்.
குறிப்பாக வாழும் வரையில் என்ற பாடலை திரும்பத் திரும்ப ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதால் தியேட்டர் நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதனால் ரசிர்கள் ரகளையில் இறங்கினர்.
இருக்கைகளை கிழித்தும், தீயணைக்க பயன்படுத்தப்படும் மண் வைக்கப்பட்டுள்ள வாளிகளையும் தூக்கி வீசி ரகளை செய்தனர்.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே புகுந்து ரசிகர்களை அமைதிப்படுத்தி அமர வைத்தனர். பின்னர் அவர்கள் கேட்ட பாடல் மீண்டும் ஒரு முறை போடப்பட்டது. அதன் பின்னரே ரசிகர்கள் அமைதியடைந்தனர்.
இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு படம் பாதிக்கப்பட்டது.
திருச்சி ரசிகர் மன்ற தலைவருக்கு குத்து:
இதற்கிடையே திருச்சி தியேட்டரில் அஜீத் ரசிகர் மன்ற தலைவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் ஏகன் படம் திரையிடப்பட்டுள்ளது.
அஜீத் ரசிகர் மன்றம் சார்பில் நேற்று பகல் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட அஜீத் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் தியாகராஜன் (35) தலைமையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டனர்.
அப்போது கும்பலாக வந்த சிலர் தியாகராஜனிடம் மொத்தமாக 200 டிக்கெட் தரும்படி கேட்டனர். அதற்கு அவர் மறுத்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தக் கும்பல் தியாகராஜனை கத்தியால் குத்தியது.
இதைப் பார்த்த ரசிகர்கள் கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கத்தியை காட்டி மிரட்டியபடியே அவர்கள் தப்பியோடிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











