இளையராஜாவுக்கு பாரதரத்னா-திருமா. கோரிக்கை

பாரத ரத்னா விருதை வைத்து பல சர்ச்சைகள் சமீபத்தில் உருவாகின. வாஜ்பாய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பலருடைய பெயர்களும் இந்த விருதுக்காக பலரால் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், 2007ம் ஆண்டுக்கான பாரத ரத்னாவை யாருக்கும் வழங்குவதில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது.
இந் நிலையில், இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இசைத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீரிய பங்காற்றி பெரும் பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. அவரைப் போன்ற மாமேதைகளுக்கு இதுபோன்ற உயரிய விருதுகளை வழங்குவதில் தாமதம் இருக்கக் கூடாது. விருது வழங்காமல் இருப்பதும் கூட ஒருவகையில் அவமானப்படுத்தும் செயல்தான்.
கடும் உழைப்புக்கு மிகச் சிறந்த உதாரணம் இளையராஜா. இந்திய இசையை உலக அரங்கில் பெருமளவில் பரப்பிய கலாச்சாரத் தூதர் இளையராஜா.
தமிழகத்திலிருந்து விஸ்வநாதன் ஆனந்த், சீர்காழி சிவசிதம்பரம், பி.சுசீலா உள்ளிட்டோருக்கு பத்மவிபூஷன், பத்ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இளையராஜாவுக்கு அந்த விருது அளிக்கப்படாதது வினோதமாக உள்ளது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











