நாளை சென்னையில் மராத்தான்-சூர்யா, ஆர்யா ஓடுகிறார்கள்

கிவ் லைஃப் என்ற அமைப்பின் சார்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கனிமொழி எம்.பி. மற்றும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
நாளை காலை 6.30 மணிக்கு சென்னை தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் பின்புறம் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 21.09 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.
போர் நினைவுச் சின்னத்தில் தொடங்கி மெரீனா சாலை வழியாக பெசன்ட்நகர் கடற்கரை வரை சென்று அங்குள்ள மாதா கோவில் அருகில் திரும்பி மெரீனா சாலை மகாத்மா காந்தி சாலைக்கு வரவேண்டும். இந்த ஓட்டத்தில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக் மராத்தான் வீரர் சுரேந்திர சிங்கும் கலந்து கொள்கிறார்.
இதே போல் 7 கிலோ மீட்டர் தூரம் ஓடும் சென்னை நகர் ஓட்டமும் நடக்கிறது. இந்த ஓட்டம் அண்ணாசாலை தீவுத்திடல் நுழைவு வாயிலில் காலை 7.30 மணிக்கு தொடங்கும். இவர்கள் தூர்தர்ஷன் சாலை வழியாக மெரீனா காந்தி சிலை அருகே வரை செல்ல வேண்டும்.
இந்த மினி மராத்தான் ஓட்டத்தில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, ஜீவா விஜய் அமிர்தராஜ், ஸ்ரீகாந்த், ஜோஸ்னா சின்னப்பா, பாஸ்கரன், தன்ராஜ்பிள்ளை, தீபிகா பாலிகல், முகமது ரியாஸ், ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் ஓடலாம். பதிவு செய்ய தேவை இல்லை.
மராத்தானில் பங்கேற்க இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இது போக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடக்கிறது. இந்த ஓட்டம் போர் நினைவுச் சின்னத்தில் தொடங்கி காந்தி சிலை அருகே முடிவடையும்.
அனைத்து ஓட்டங்களிலும் சேர்த்து 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கிறார்கள். வீரர்களுக்கு உதவுவதற்காக 15 டாக்டர்கள் குழு தயாராக உள்ளது. 50 பிசியோதெரபிஸ்டுகளும் தயாராக இருப்பார்கள். 15 ஆம்புலன்சுகளும் வழி நெடுக நிறுத்தப்பட்டிருக்கும்.
ஓட்டத்தில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா ராணி மேரி கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். மத்திய விளையாட்டு மந்திரி எம்.எஸ்.கில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மைதீன்கான் ஆகியோர் பரிசுகளை வழங் குகின்றனர்.
21.09 கிலோ மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வருபவருக்கு ரூ.10 லட்சம் பரிசும், பெண்கள் பிரிவுக்கு தனியாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும். மொத்தம் ரூ.70 லட்சம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் கிடைக்கும் நிதி 13 ஆயிரத்து 600 ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி, ஊட்டச்சத்து, உடல்நல பாதுகாப்பு ஆளுமை வளர்ச்சி பயிற்சி ஆகியவற்றுக்காக செலவிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











