தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை.
கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தசாவதாரம். இந்தப் படத்துல என்னய்யா கதை இருக்கு... இதே வேலையை வேற எவனாவது செய்திருந்தா பத்திரிகைக்காரங்க நீங்கல்லாம் போட்டுக் கிழிச்சிருக்க மாட்டீங்க... இப்ப என்ன பண்றீங்க... குறிப்பிட்ட நடிகரை (கமல்) குளிர்விப்பதற்காக ஆஹா ஓஹோன்னு எழுதறீங்க!
12ம் நூற்றாண்டில் பெருமாளைக் கடலில் தள்ளிய நிகழ்ச்சிக்கும், 21ம் நூற்றாண்டில் சுனாமி வந்ததற்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டால், 'பட்டர்பிளை எஃபக்ட்' என கதை சொல்லி ஏமாத்தறாங்க. லாஜிக் இல்லாம சினிமா எடுக்க இப்படியும் ஒரு காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நான் கமலை திட்டுவதாக எண்ண வேண்டாம். இந்த விமர்சனத்தை அவரிடம் நேரடியாகவே சொன்னவன் நான். அந்த துணிச்சல் எனக்கிருக்கிறது.
இப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் சினிமா என்பது இயக்குனரிகளின் பிடியிலிருந்து நழுவிவிட்டதுதான் என்றார் பாரதிராஜா.
உங்கள் சினிமாவிலும் குறைகள் இருக்கத்தானே செய்கின்றன? என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, நான் மக்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, காதலும் இசையும் கலந்த வாழ்க்கையைப் பற்றிப் படமெடுத்தவன். ஒரு சராசரி மனிதனிடம் உள்ள சாதாரண குறைகள் அந்தப் படங்களில் இருப்பதுதான் அந்தக் கதைகளுக்கு அழகு. இல்லாவிட்டால் அவை எதார்த்தத்தை மீறியதாகிவிடும் என்றார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











