விவேகானந்தர் குறித்த வரலாற்று 3டி படம்

இந்த 3டி குறும்படத்தை பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான ஆர்.எம். வாசகம் வெளியிட்டார்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ளது விவேகானந்தர் நினைவு இல்லம். 1842ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் ஆங்கிலேயர்களால் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டது. இதனால் இது "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு இந்தக் கட்டடத்தை சுவாமி விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார் வாங்கி "கெர்னான் கேசில்' என்று பெயரிட்டார். 1897ம் ஆண்டு சென்னை வந்த விவேகானந்தர் பிப்ரவரி 6 முதல் 14ம் தேதி வரை 9 நாள்கள் இங்கு தங்கினார். அப்போதுதான் அவர் புகழ்பெற்ற 6 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
1897ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டடத்தில்தான் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை, சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கினார். 1906ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் மடம் இங்குதான் இயங்கியது. மடம் இங்கு இயங்கிய போது ராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், நிரஞ்சனானந்தர், திரிகுணாதீதானந்தர், அபேதானந்தர் ஆகியோர் வருகை தந்தனர். இவர்கள் தவிர சகோதரி நிவேதிதாவும் இங்கு வருகை தந்துள்ளார்.
தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்குப் பெற்று நிர்வகித்து வருகிறது.
1963ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தக் கட்டடத்துக்கு விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.
தற்போது விவேகானந்தரின் 150வது பிறந்தநாளையொட்டி தான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இந்த 3டி படத்தை வெளியிட்டுள்ளது. இது போன்று மேலும் பல புதிய விஷயங்களை விவேகானந்தர் இல்லத்தில் அறிமுகப்படுத்தவிருப்பதாக மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா தெரிவித்துள்ளார்.
விவேகானந்தர் இல்லத்திற்கு சுற்றுலா வர விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள், கார்பரேட் அமைப்புகள் 91-44-28446188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். புதன்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்கள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடக்கும். பெரியோர்களுக்கான கட்டணம் ரூ. 10, மாணவ-மாணவியருக்கு ரூ. 5 ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு website www.vivekanandahouse.org என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.


Click it and Unblock the Notifications











