ஏ.பி.நாகராஜன் ஒரு பிரமாண்ட இயக்குனர்... ஏப்ரல் மாதம் காலமான அவர் நினைவாக ஒரு ரீவைண்டு
சென்னை : தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர்கள் காலங்கள் கடந்தாலும் நினைவில் கொள்ளப்படும். நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காத படங்களை மீண்டும் மீண்டும் பேசப்படும். அப்படி ஒரு பெயர் தான் ஏ.பி நாகராஜன் .
நடிகராக திரை உலகில் நுழைந்து, திரைக்கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர் என உயர்ந்து பிறகு இயக்குநராக வெற்றிநடை போட்டவர் ஏபி.நாகராஜன் எனும் ஏபிஎன்.இன்றைய ப்ரமாணட இயக்குனர் ஷங்கர்,ராஜமௌலி போன்றவர்கள் கண்டிப்பாக இன்னமும் இவர் படம் மூலம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் .
ஏ.பி.நாகராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் "குப்புசாமி" என்பதாகும். இவர் பணியாற்றிய டி.கே.எஸ். நாடக குரூப்பில் மொத்தம் 3 பேர் "குப்புசாமி" என்ற பெயர் கொண்டவர்களாக இருந்தனர். இதனால் டி.கே.சண்முகம் அதற்கு ஒரு முடிவு கட்டினார். இவருக்கு பெற்றோர் வைத்த குப்புசாமி' என்ற பெயரை மாற்றி "நாகராஜன்" என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் அது புகழ் பெற்ற பெயராக மாறியது.

வியப்பில் ஆழ்த்துபவை
ஏ.பி.நாகராஜன் இயக்கிய படங்களை இந்த ஏப்ரல் மாதத்தில் பல டீ.வி சேனல்கல் தொடர்ந்து ரீவைண்ட் செய்து வருகின்றனர் . ஏ.பி.நாகராஜன்பிரம்மாண்டப் படங்களின் காரணகர்த்தா.இருபது வருட காலம் தொடர்ந்து இயக்கியப் படங்கள் அனேகமும் வெற்றிப் படங்கள். நவராத்திரி, திருவிளையாடல், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், திருமலை தென்குமரி, ராஜராஜ சோழன், கண்காட்சி என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை. இந்த படங்கள் தியேட்டரில் ரீலீஸ் ஆன தருணங்களை இன்று வரை பலரும் பல நினைவுகளுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் .ஏ.பி. நாகராஜன் பெயர் எப்போதும் புராணப்படங்களோடே தொடர்பு கொள்ளப்படுகிறது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் திரைப்படங்களில் அவர் எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் அவர் எடுத்த அத்தனைப் புராணப்படங்களுமே பரீட்சார்த்த முயற்சிகள் தான் என்பது மேலும் சிறப்பு. புராணப்படங்கள் எடுக்கும் ஒரு உண்மையான ரீவைண்ட் ராஜா ஏ.பி.நாகராஜன் தான் என்பதில் சந்தேகம் இல்லை .

காட்சி வடிவமாகத் தந்த இயக்குனர்
இவர் இயக்குவதற்கு முன்பும் இந்தியாவில் புராணப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அவை எல்லாமே புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும் அப்படியே எடுத்தாளப்பட்டு திரைவடிவமாக மாற்றப்பட்டவை. அவை யாவற்றிலும் இருந்து ஏ.பி நாகராஜன் தன்னுடைய பாணியை முற்றிலுமாக மாற்றிக் கொண்டார் என்பது தான் சிறப்பு. ஏ.பி நாகராஜன் கதை சொல்லும் விதம், திரைக்கதை கொடுக்கும் உணர்வு பூர்வமான காட்சிகள் என்று மிகவும் மெனக்கெடலுடன் செய்யப்படுவார் . ஏ.பி.என்.னின் காலகட்டத்திற்கு முன்பு புராணப்படங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டிருந்தன. நாம் புராணத்தில் என்ன வாசிக்கிறோமோ அதையே காட்சி வடிவமாகத் தந்திருந்தனர்.கொஞ்சம் அலுப்பு தட்டும் விதமாக இருந்த அந்த ஸ்டைல், முழுவதுமாக மாற்றினார் ஏ.பி.என். கடவுள்கள் மிக நேர்த்தியுடனும், அருளாசி தருபவர்களாவும், வரங்கள் அளிப்பவர்களாகவும் அரக்கர்களை வதம் செய்பவர்களாகவும் காட்டப்பட்டனர். ஏ.பி என் இவை எல்லாவற்றையும் கடந்து பல கோணங்களில் புராணங்களை மிகவும் வித்யாசமாக அணுகுகினார் .

பரமசிவனையே கலாய்த்து வசனம்
ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, 'நவராத்திரி' படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் 'திருவிளையாடல்' படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி.

எம்.ஜி.ஆரை வைத்து ஒரே படம்
இவரது சாதனை மகுடத்தில் 'தில்லானா மோகனாம்பாள், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான 'ராஜராஜசோழன்'ஆகியவை உண்டு . இந்தியாவுக்கு வெளியே விருதுபெற்ற முதல் தமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.நடிகர் திலகம் சிவாஜியை வைத்துப் பல படங்களை இயக்கிய இவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம், 'நவரத்தினம்'. அதுவே அவரது கடைசிப் படம். 1977-ல் நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப்போவதில்லை என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications











