அத்வானியை அழ வைத்த அமீர்!

அமீர் கான் முதன் முதலாக இயக்கி, வெளியாகியுள்ள படம் தாரே ஜமீன் பர். மாற்றுத்திறன் கொண்ட சிறுவன் குறித்த கதை இது. தனது குறையைத் தாண்டி அந்த சிறுவன் எப்படி சாதனை படைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
திரையிட்ட இடமெல்லாம் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் அத்வானி இப்படத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து டெல்லியில் அவருக்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தார் அமீர் கான்.
படத்தைப் பார்த்ததும் அத்வானியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையாம். கண்ணீர் மல்க படத்தைப் பார்த்தாராம்.
இதுகுறித்து அமீர் கான் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், அத்வானிஜி அழுததை நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். படத்தின் கதை அவரை வெகுவாக பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.
அவருக்கு திரைப்படம் குறித்த நல்ல ஞானம் உள்ளது. நல்ல விமர்சகராக அவர் இருக்கிறார். எனது லகான் படத்தை தான் பார்த்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அவருக்கு தாரே ஜமீன் பர் படத்தைப் போட்டுக் காட்டியதற்காக பெருமைப்படுகிறேன் என்றார் அமீர்.
அமீர் கானின் இயக்கத்தையும், படத்தின் கதையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் அத்வானி. இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குநரும், படத்தின் கதையும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்ட அருமையான படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அமீருக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்து வகையிலும் இப்படம் மிகச் சிறந்ததாக உள்ளது. எடுத்துக் கொண்ட அம்சம் மிகக் கடினமானது. அதேசமயம், ரசிகர்களின் இதயங்களைத் தொடும் வகையில், கதையை அமைத்துள்ளார் அமீர் கான் என்றார் அத்வானி.


Click it and Unblock the Notifications











