நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் இன்று… ஸ்பெஷல் ரவுண்டப் !
சென்னை : ஒல்லியான உடல்...பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் பாடி லாங்குவேஜ் ,அபரிமிதமான நடிப்பு என்று இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நடிகர் நாகேஷ்.
Recommended Video
உன்னதமான கலைஞர்கள் இறந்தாலும் தங்களின் ஈடு இணை இல்லாத கலையால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடிகர் நாகேஷின் பிறந்த நாளான இன்று இவரது ரசிகர்கள் அவரை பற்றி நினைவு கூர்ந்து வருகின்றனர்.

நாகேஸ்வரன்
1933ம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்தவர் நாகேஷ். கிருஷ்ணன் ராவ், ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன்.

தை தாண்டபாணி
கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்து வந்தார் நாகேஷ். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது தீராத காதல் கொண்டதால் நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். டாக்டர் நிர்மலா நாடகத்தில், தை தண்டபாணி என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கை தட்டலை பெற்றார்.

தாமரைக்குளம் அறிமுகம்
முதன் முதலாக தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நாகேஷுக்கு திருப்புமுனையாக அமைந்த ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.

கதாநாயகனாக
இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. இதையடுத்து, தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர்நீச்சல், யாருக்காக அழுதான் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

பல விருதுகள்
வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்திய நடிகர் நாகேஷ், கலைமாமணி விருது, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாநில அரசின் விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்று இருக்கிறார்.

2009ம் ஆண்டு இறந்தார்.
2009ம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி நடிகர் நாகேஷ் மறைந்தார் அவர் மறைந்து இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார். நாகேஷ் பிறந்த நாளான இன்று இவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











