தரமான படங்களுக்கு சொந்தக்காரர் சசிக்குமார்... பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை : டைரக்டர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டவர் சசிக்குமார். முதல் படமான சுப்ரமணியபுரம் படத்திலேயே மாஸ் வெற்றி, தரமான காதல் கதையை சொல்லி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.
அசிஸ்டென்ட் டைரக்டராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சசிக்குமார், 13 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோ, முக்கியமான டைரக்டர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் தனது 46 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் சசிக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாலாவிடம் அசிஸ்டென்ட்
சேது படத்தில் பாலாவிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்த சசிக்குமார், அந்த படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு அமீர் இயக்கிய மெளனம் பேசியதே மற்றும் ராம் படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றினார். கிட்டதட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றினார்.

முதல் படமே மாஸ் ஹிட்
2008 ல் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் டைரக்டரானார். அதில் ஹீரோவுக்கு இணையான அழுத்தமான பரமன் கேரக்டரில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் சசிக்குமார். தொடர்ந்து அடுத்த ஆண்டே சமுத்திரக்கனி இயக்கிய நட்பை மையமாகக் கொண்ட நாடோடிகள் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் யதார்த்தமான, அலட்டல் இல்லாத நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறைய படவாய்ப்புக்கள் சசிக்குமாருக்கு வர துவங்கியது.

பாலா இயக்கத்தில் சசிக்குமார்
மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்த சசிக்குமார், பாலா இயக்கத்திலும் நடித்தார். இளையராஜாவின் 1000 வது படமான தாரை தப்பட்டை படத்தில், நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கேரக்டரில் நடித்தார். அதில் நாதஸ்வர கலைஞர் ரோலில் நடித்திருப்பார். இந்த படத்தை சசிக்குமாரே தயாரித்திருந்தார். இதைத் தொடர்ந்து வரிசையாக வெற்றிவேல், அப்பா, கிடாரி, பலே வெள்ளையத்தேவா படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சசிக்குமார்.

இரண்டு படங்கள் மட்டுமே இயக்கம்
சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்த சசிக்குமாரர், அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஈசன் படத்தை இயக்கி, தயாரித்தார். ஆனால் அதில் நடிக்கவில்லை. அந்த படம் எதிர்பார்த்தபடி பேசப்படவில்லை. அதன் பிறகு இயக்குவதை நிறுத்தி விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தினார்.

தயாரிப்பில் வெற்றி
பசங்க, போராளி, சுந்தரபாண்டியன், தலைமுறைகள், தாரை தப்பட்டை, அப்பா, கொடிவீரர், கிடாரி போன்ற சில படங்களை தயாரித்து, அதிலும் வெற்றி கண்டார் சசிக்குமார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது, தரமான படங்களை தயாரிப்பது என தனக்கென தனி பாணியை வைத்துள்ளார் சசிக்குமார். பாலு மகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தை சசிக்குமார் தான் தயாரித்திருந்தார். இந்த படம் தேசிய விருதை பெற்றது.

மாஸ் ஹீரோக்களுடன் சசிக்குமார்
ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் சிறிய ரோலில் நடித்தாலும், பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு முன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியுடனும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுடனும் இணைந்து நடித்திருந்தார் சசிக்குமார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்திருந்தார் சசிக்குமார்.

வரிசையாக 6 படங்கள்
கடந்த ஆண்டு நாடோடிகள் 2 படத்தில் மட்டுமே நடித்த சசிக்குமார், தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நானா, உடன் பிறப்பே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் பல படங்களின் ஷுட்டிங் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

பாடகர் அவதாரம்
டைரக்ஷன், நடிப்பு, தயாரிப்பு மட்டுமின்றி 2 படங்களில் பாடலும் பாடி உள்ளார் சசிக்குமார். வம்சம் படத்தில் சுவடு சுவடு என்ற பாடலையும், போராளி படத்தில் விடிய போற்றி என்ற பாடலையும் சசிக்குமார் பாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











