சிவாஜியின் குரல் கேட்டு தன்னை அறியாமல் கண்ணீர் விட்ட கார்த்தி... இளையராஜா மட்டும்தான் துணையாம்
சென்னை: விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்சமயம் சர்தார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்திரம் தான் சர்தார் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் சிவாஜி கணேசன், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா அவர்களைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

கார்த்தியின் ஆசை
நடிகர் கார்த்திக்கிற்கு சிறு வயது முதலே கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இப்போது தயாரிப்பாளராக இருக்கும் ஞானவேல் ராஜா அப்போது கார்த்தியினுடைய சிறு வயது நண்பராம். நான் படம் தயாரித்தால் நீ கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று அப்போதே இருவரும் பேசிக் கொள்வார்களாம். ஆனால் வளர வளர கார்த்திக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்து இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாம்.

பட்டப் படிப்பு
வழக்கமாக சினிமா வாரிசுகள் பள்ளிப்படிப்பை முடித்தும் முடிக்காமலும் உடனே நடிக்க வருவார்கள். ஆனால் நடிகர் சிவகுமார் அவர்களை பொறுத்தவரை அவரது பிள்ளைகளை பட்டப் படிப்பு படிக்க வைத்த பின்னர் தான் சினிமாவிற்குள் அனுமதித்தார். அந்த வகையில் கார்த்தி இங்கு கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார் சிவகுமார்.

வாட்டிய தனிமை
அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றால் தனிமை உங்களை கொன்று விடும். அங்கு நாட்களை கடத்தவே முடியாது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் இளையராஜாவின் இசை இல்லையென்றால் அந்த நாளை கடக்கவே முடியாது என்று கார்த்தி தனிமையின் வலியை பற்றி கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அங்கு தான் முதன் முதலில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்களை கேட்க ஆரம்பித்ததாகவும் பார் மகளே பார் என்ற படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலைக் கேட்டபோது, உடனே தான் அழுதுவிட்டதாகவும் அப்போதுதான் சிவாஜி கணேசன் தன் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை தான் உணர்ந்ததாகவும் கார்த்தி கூறியுள்ளார்.

தமிழர்களோடு ஒன்றிய சினிமா
அந்த நேரத்தில்தான் சினிமா நம்முடைய வாழ்வில் எப்படி ஒரு கலாச்சாரமாக ஒரு அங்கமாக இருக்கிறது என்பதை தான் உணர்ந்ததாக கார்த்தி கூறியுள்ளார். படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தவருக்கு ஆயுத எழுத்தில் சூர்யாவின் தம்பியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து மணிரத்தினத்தை சந்தித்தபோது எனக்கு நடிக்க வாய்ப்பு வேண்டாம் துணை இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கொடுங்கள் என்று கார்த்தி கேட்டு அவருக்கு அசிஸ்டெண்டாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











