ஷ்ரியாவை நிராகரித்த அஜீத்

பில்லாவுக்கு அடுத்து அஜீத் நடிக்கவுள்ள படம் அக்பர். ராஜு சுந்தரம் இயக்குகிறார், அய்ங்கரண் இன்டர்நேஷனல் படத்தைத் தயாரிக்கிறது.
இப்படம் குறித்து முடிவானவுடன் நாயகியாக ஷ்ரியாவை போட தீர்மானித்தார் ராஜு சுந்தரம். உடனடியாக அவரையும் அணுகி கால்ஷீட் கேட்டார். அப்போது நான் ரொம்ப பிசி என்று கூறிய ஷ்ரியா 3 மாதங்கள் காத்திருங்கள் என்று கூறினார்.
ஆனாலும் அவரிடமிருந்து பாசிட்டிவான பதில் ஏதும் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஷ்ரியா. ஆனால் இம்முறை ஹீரோ அஜீத் கடுப்பாகி விட்டார். ஷ்ரியாவே வேண்டாம். வேறு நாயகியைப் பாருங்கள் என்று ராஜு சுந்தரத்திடம் கூறி விட்டார்.
இதனால் ஷ்ரியாவை பட்டியலிலிருந்து தூக்கி விட்டனர். புதுமுக நாயகியைப் போட தீர்மானித்து ராஜு சுந்தரம் மும்பையில் முகாமிட்டுள்ளார். அங்குள்ள சிலமாடல் கோ ஆர்டினேட்டர்களைப் பிடித்து நல்ல நாயகியாகத் தேடி வருகிறாராம் ராஜு சுந்தரம்.
ஷ்ரியாவை அஜீத் நிராகரிக்க அவர் செய்த தாமதம் மட்டும் காரணமில்லையாம். வடிவேலுவுடன் அவர் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதும் ஒரு முக்கிய காரணமாம்.
வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் ராஜா படத்திற்குப் பிறகு டெர்ம்ஸ் சரியில்லை. அஜீத்தின் சமீப கால படங்கள் எதிலும் வடிவேலு இடம் பெறவில்லை. இந்த நிலையில் வடிவேலுவுடன் குத்தாட்டம் ஆடியதால் ஷ்ரியாவைப் பிடிக்காமல் போய் விட்டதாம் அஜீத்துக்கு.
ஷ்ரியாவைப் பொறுத்தவரை அஜீத் படத்தை இழந்தது ஒரு பின்னடைவுதான் என்றாலும் கூட அவரது கை வசம் நிறையப் படங்கள் இருப்பதால் சந்தோஷமாகத்தான் உள்ளார்.
இந்தியில் இரண்டு படங்கள், ஹாலிவுட் படம், இதுதவிர தமிழில் விக்ரமுடன் கந்தசாமி என படு பிசியாகத்தான் உள்ளார் ஷ்ரியா. மேலும் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரியா நடிக்கக் கூடும் என்றும் பேச்சு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











