ஷாருக் தான் பெஸ்ட்-அமிதாப்
எனது மகன் அபிஷேக் பச்சனை விட ஷாருக் கான் மிகச் சிறந்த நடிகர், அவருடன் எனக்கு எந்த மோதலும் இல்லை என்று பிக் பி அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக பல காலம் கோலோச்சி வருபவர் அமிதாப் பச்சன். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது இடத்தை அசைத்துப் பார்த்தவர் ஷாருக் கான்.அமிதாப் இடத்தை ஷாருக் பிடித்து விட்டார் என்று பாலிவுட்டே ஒரு கட்டத்தில் கூறத் தொடங்கியது. அதை உறுதிப்படுத்துவது போல அமிதாப் பச்சன் நடத்தி வந்த குரோர்பதி நிகழ்ச்சியில் ஷாருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனால் ஷாருக் கான் மீது அமிதாப் வருத்தமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அமிதாப் மறுத்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், எனக்கும், ஷாருக் கானுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மோதலும் இல்லை. இதெல்லாம் கற்பனையாளர்களின் தேவையற்றப் பேச்சுக்கள் என்றார்.
தொடர்ந்து அவரே, எனது மகன் அபிஷேக் பச்சனை விட ஷாருக் கான் மிகச் சிறந்த நடிகர். இதை அபிஷேக்கும் ஒத்துக் கொள்வார் என்றார்.
அதேபோல, சஞ்சய் தத்துக்கு குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதற்கும் அமிதாப் பச்சன் வருத்தம் தெரிவித்தார். சஞ்சய் தத் எனது நண்பர். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்னை வருத்தமடையச் செய்தது. அதேசமயம், நமது சட்டத்தையும் நாம் மதித்தாக வேண்டும் என்றார் அமிதாப்.
எல்லாம் சரி, விவசாயி என்று கூறிக் கொண்டு உ.பி, மகாராஷ்டிராவில் விவசாய நிலங்களை வாங்கிக் குவித்தது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு அமிதாப் சற்று சூடாகவே பதிலளித்தார்.
விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் விவசாயிகள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நமது நாட்டில் லட்சக்கணக்கில் உள்ளனர். வயலில் இறங்கி உழுதால்தான் விவசாயியா?
எனவே இந்த விஷயம் தொடர்பாக என்னை யாரும் கேலி செய்யாதீர்கள். விவசாய நிலங்களை வாங்கியதில் என்ன தவறு இருக்க முடியும். அப்படி அது தவறு என்றால் என்னை பேசாமல் சிறையில் அடைத்து விடுங்கள் என்றார் கோபமாக அமிதாப்.


Click it and Unblock the Notifications











