சந்திரபாபு வாழ்க்கைதான் 'அந்த 7 நாட்கள்' - கே பாக்யராஜ்

ஒரு கிராமத்து சிறுமிக்கும், உலக சினிமாவின் ஒப்பற்ற நகைச்சுவை கலைஞரான சார்லி சாப்ளினுக்குமான உணர்வுப்பூர்வமான தொடர்பை வைத்து 'சாப்ளின் சாமந்தி' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 'ஃபேம் நேஷனல்' தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டுப் பேசினார்.
வழக்கம் போல மிக சுவாரஸ்யமாக அமைந்தது அவர் பேச்சு. அவர் கூறுகையில், "சாப்ளின் சாமந்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை இந்த படத்தின் டைரக்டர் பிரகாஷ் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தபோது, படத்தின் கதையை சொன்னார்.
கதையை கேட்டு முடித்ததும், அவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. இப்படி ஒரு கதையை நாம் யோசிக்கவில்லையே என்பதால் ஏற்பட்ட பொறாமை அது.
எப்போதுமே நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்த கதாபாத்திரங்களை படமாக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை கருவாக வைத்துதான் 'அந்த 7 நாட்கள்' படத்தை எடுத்தேன். முதல் இரவு அன்றே மனைவியின் காதல் பற்றி கேள்விப்பட்டு, மனைவியை காதலருடன் அனுப்பி விட்டவர் சந்திரபாபு.
அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த 'அந்த 7 நாட்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.
விழாவில் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர்கள் ஜனநாதன், பாலாஜி சக்திவேல், சசி, கரு.பழனியப்பன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலசேகரன் ஆகியோரும் பேசினார்கள்.
இயக்குநர் ஆர்.பிரகாஷ் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











