இசைப்புயலுக்கு வயசு 48!

ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல மெகா ஹிட் பாடல்களைத் தந்தார்.
ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் இசையமைத்ததற்காக நான்கு முறை தேசிய விருதுகள் வென்றார்.
அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல, ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற படத்துக்கு இசையமைத்ததற்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். தமிழர்களைப் பெருமைப் படுத்தும் வகையில், அந்த ஆஸ்கர் மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே என தனது தாய்த் தமிழில் பேச்சை ஆரம்பித்து இனிய அதிர்ச்சி தந்தார்.
இன்றைக்கு தமிழ், இந்தி என்ற வட்டத்தைத் தாண்டி, சர்வதேச அளவில் மெச்சத்தக்க ஒரு இசையமைப்பாளராகத் திகழ்கிறார் ரஹ்மான்.
2013-ம் ஆண்டில் ரஹ்மான் இசையில் தமிழில் கடல் மற்றும் மரியான் படங்கள் வெளியாகின. இரண்டுமே கடல் சார்ந்த கதைகள். இந்தப் படங்களின் உண்மையான நாயகனாகத் திகழ்ந்தார் ஏஆர் ரஹ்மான்.
படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், அவர் போட்ட நெஞ்சுக்குள்ளே..., மூங்கில் தோட்டம்..., கடல் ராசா நான், நெஞ்சே எழு போன்ற பாடல்கள் நெஞ்சில் நிலைத்துவிட்டன.
ரஹ்மான் ரசிகர்களுக்கு இதற்கு முந்தைய ஆண்டுகளை விட ரொம்ப ஸ்பெஷலாக அமைகிறது இந்த ஆண்டு. இந்த ஆண்டில் கோச்சடையான், ஐ, கவுதம் மேனன் படம் மற்றும் காவியத் தலைவன் போன்ற படங்கள் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர மூன்று ஆங்கிலப் படங்களும் அவர் இசையில் வெளியாக உள்ளன.
இன்னும் இன்னும் இனிய இசை தந்து மக்கள் மனங்களை ஆற்றுப்படுத்த இசைப் புயலை வாழ்த்திடுவோம்!


Click it and Unblock the Notifications











