தந்தையாக தவறவிட்ட அனுபவங்களை தாத்தாவாக நினைவேற்றுகிறார் ரஜினி... லதா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக இயக்குநர்கள் மணிரத்னம், தேசிங்கு பெரியசாமி அல்லது சிபி சக்கரவர்த்தி ஆகிய மூவரில் ஒருவர் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுடைய மனைவி லதா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து சில சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார்.

சுதந்திரம்
ஒரு சூப்பர் ஸ்டாரின் மனைவியாக இருப்பதால் உங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சூப்பர் ஸ்டாரை பார்ப்பதையும் பேசுவதையும் அவருடன் வாழ்வதையும் நான் எனக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன். அது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்னால்தான் அவருக்கு எந்தவிதமான தொந்தரவும் வந்து விடக்கூடாது என்று எப்போதும் நினைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

பிறப்பிலேயே நடிகன்
என்னுடைய கணவர் ரஜினிகாந்த் ஒரு நேச்சுரல் ஆக்டர். இயல்பாகவே அவருக்குள் ஒரு நடிகன் இருக்கிறார். அதனால்தான் கமர்சியல் திரைப்படங்களில் நடிக்கும்போது கூட அந்த இயல்பான நடிகன் வெளிப்படுவார். ஸ்டைல் என்பது அவர் கூடவே பிறந்தது. முள்ளும் மலரும் காளியாக வரும்போது கூட அந்த கதாபாத்திரத்தில் ஒரு ஸ்டைல் இருக்கும். அது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒன்று என்று கூறி இருக்கிறார்.

பேரப் பிள்ளைகள்
நான் எப்போதுமே அவர் மீது கோபப்பட்டதில்லை. ஆனால் அக்கறையுடன் இருப்பேன். எங்களுடைய பேரப்பிள்ளைகள் கூட அவரை தாத்தாவாக பார்ப்பதை விட ஒரு சூப்பர் ஸ்டாராகத்தான் பார்க்கிறார்கள். அவரை போலவே நடித்துக் காட்டுவது, வசனங்கள் பேசி காட்டுவது என அவரை பிரதிபலிப்பார்கள். அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் இரண்டு மகள்களுடனும் அதிக நேரம் செலவிட்டதில்லை.

முழுமையான தாத்தா
தொடர்ச்சியான நடிப்பு, சினிமாவில் இருந்த படப்பிடிப்பு நேரம் போன்றவைகளால் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுடன் அவர் சராசரியான தந்தையை விட குறைவான நேரம்தான் இருந்துள்ளார். ஆனால் அந்த மொத்த அன்பையும் இப்போது தனது பேரப் பிள்ளைகளிடம் காட்டி வருகிறார். அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது, காரில் டிரைவிங் கூட்டிப் போவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அவர்கள் உலகத்திற்குள் இவரும் ஒரு குழந்தையாக செல்வது, அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பது என்று மொத்தமாக அவர்களுடன் நேரம் செலவிடுகிறார். அவர் ஒரு கம்ப்ளீட் தாத்தாவாக இப்போது இருக்கிறார் என்று தன்னுடைய கணவர் ரஜினிகாந்தை பற்றி லதா ரஜினிகாந்த் பெருமையாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











