அவர் கேமராவுக்கு மட்டும் கிராமத்து வாசனை கொஞ்சம் ஜாஸ்தி.. ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் கேமரா கண்கள்!
சென்னை: தமிழ் சினிமா ஒளிப்பதிவில், சில அடிப்படைகளை அழுத்தமாக அடிகோடிட்டு கொடுத்திருக்கிறார், மறைந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்!
இளையராஜா இசையில் ஒரு கிராமத்துப் பாடலை கேட்கும்போது, பறவைகளின் ஓசையோடு வயல்வெளிகளிலும் ஆற்றங்கரையிலும் நடக்கும் உணர்வை பெறுவது நிச்சயம்.
அப்படி, கிராமங்களின் மண் வாசனை உணர்வை ஒளிப்பதிவில் ஊட்டியவர், பி. கண்ணன்! சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் சாத்தியப்படும்.

அடிப்படைகளை
அப்படியொரு சாத்தியத்தை ஏற்படுத்திருக்கிறார், பி.கண்ணன். இங்கு எல்லாவற்றும் ரெபரன்ஸ் வேண்டும். செட்டுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை பாரதிராஜா, வெளியே கொண்டு சென்றபோது அவருக்கு ரெபரன்ஸ் அதிகம் இருந்திருக்காது. அதை அவர் உருவாக்கினார். அதே போல ஒளிப்பதிவிலும் சில அடிப்படைகளை உருவாக்கியவர் பி.கண்ணன். அதில் ஒன்று கிராமத்து ஒளிப்பதிவு.

ஒளிப்பதிவின் முன்னோடி
இப்போது கூட ஒரு ஒளிப்பதிவாளர், கிராமத்து படம் பண்ணப்போகிறார் என்றால் அவருக்கு ரெபரன்ஸ், பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்த படங்கள்தான். அதுதான் சினிமாவில் எல்லாமுமாக இருக்கிறது என்கிறார்கள், சில ஒளிப்பதிவாளர்கள். பிரபல ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், தமிழ் சினிமா ஒளிப்பதிவின் முன்னோடி என்கிறார், பி. கண்ணனை!

அவுட்டோர் ஷூட்டிங்
'சினிமா ஒளிப்பதிவில் அவுட்டோர் ஷூட்டிங் ரொம்ப கஷ்டம். ஏன்னா, லைட்டிங்கை கன்ட்ரோல்ல வச்சிருக்கிறது எளிமையான விஷயமல்ல. இன்டோர்னா நம்ம கன்ட்ரோல்ல வச்சுக்கலாம். பி.கண்ணன் படங்கள்ல அந்த கன்ட்ரோல் சிறப்பாக இருக்கும். அதே கிராமத்து தன்மையை படங்களில் கொண்டு வந்ததில் அவர் பங்கு அளப்பரியது. கேமராவுல ஜூம் இயக்கறது கஷ்டம். அதுல இவர் மிகப்பெரிய முன்னோடி' என்கிறார் அவர்.

கிராமத்தின் குளிர்ச்சி
ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு இவர் செயலாளர் ஆனபிறகுதான், கேமராமேன்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தார் என்கிறார்கள். நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் கூறும்போது, 'பாரதிராஜா படங்களில் கிராமத்தின் குளிர்ச்சியை கண்டதற்கு அவர்தான் காரணம். அவர் கேமராவுக்கு கிராமத்து வாசனை அதிகம். தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர், பி.கண்ணன் சார். அதுதான் அவர் இயல்பு' எனகிறார்.

கடத்த நினைப்பவர்
'ஒளிப்பதிவில் தனக்கு தெரிந்த விஷயத்தை அடுத்தவரிடம் கடத்த நினைப்பவர் அவர் என்கிறார் பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் கண்ணனின் சகோதரர் பி.லெனினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். 'லெனின் சார் இயக்கிய 'நாக் அவுட்' படம் பிளாக் அண்ட் ஒயிட்டில் உருவான படம். அதில் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். எளிமையான ஆசிரியர் போல் நடந்துகொள்வார். சகஜமான மனிதர். அப்போதெல்லாம், பாரதிராஜா படத்துக்கு ஷூட்டிங் சென்றுவந்ததும் குன்றத்தூர் போய்விடுவார் அவர். அங்கு வயல்வெளிகளுடன் கூடிய வீடு அவருக்கு. அங்கு சென்றதும் விவசாயி போல ஆகிவிடுவார்' என்று நினைவு கூர்கிறார் ஜனநாதன்.

பொக்கிஷப் படங்கள்
பாரதிராஜா அறிமுகப்படுத்திய ராதிகா, ரேவதி, ராதா, ரஞ்சனி உள்ளிட்ட 'ர' வரிசை ஹீரோயின்களையும் முதன்முதலாக ஃபிரேமில் அழகாகக் காண்பித்தவர் பி.கண்ணன். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிற அவர், தமிழ் சினிமாவுக்கு அவரோடு இணைந்து சில பொக்கிஷப் படங்களை கொடுத்திருக்கிறார். அது என்றென்றும் அவர் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும்!


Click it and Unblock the Notifications











