பாரதிராஜாவின் சினிமா ஓவர்!
பாரதிராஜா இந்தியில் இயக்கி வந்த சினிமா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது.
கிட்டத்தட்ட 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பாரதிராஜா தனது பாணியில் ஒரு வித்தியாசமான கதையுடன், சினிமா மூலம் தனது ரசிகர்களிடம் வருகிறார்.நானா படேகர், அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதை சினிமாவைப் பற்றியது என்பதால் படத்தின் பெயரையே சினிமா என்று வைத்து விட்டார் பாரதிராஜா.
தமிழிலும் இப்படம் டப் ஆகிறது. அதற்கு பொம்மலாட்டம் என்று பெயரிட்டுள்ளார் பாரதிராஜா. மலேசியாவில் கடந்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. கடந்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சினிமாவில், நானா படேகர் இயக்குநராக வருகிறார். அவர் இயக்கும் படத்தின் ஜோடியாக அர்ஜூன், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். பாலிவுட்டின் இசைப் புயல் ஹிமேஷ் ரஷ்மய்யா இசையமைத்துள்ளார். பாடல்கள் கல்கண்டுப் பாகாக உருவாகியுள்ளதாம்.
ஹிமேஷுக்கு தமிழில் பொம்மலாட்டம்தான் முதல் படம். அடுத்ததாகத்தான் அவர் தசாவதாரத்திற்குப் புக் ஆனாராம். பாடல்களுக்கு மட்டும் ஹிமேஷை பயன்படுத்தியுள்ள பாரதிராஜா, பின்னணி இசைக்கு மாண்டி சர்மாவை பயன்படுத்தியுள்ளார்.
மாண்டியும், இந்தியில் பிரபலமான இசையமைப்பாளர்தான். பாம்பே பிரதர்ஸ் தியேட்டருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் பிளாக் படத்திற்கு அவர்தான் பின்னணி இசையமைத்திருந்தார். இப்போது பாரதிராஜா மூலம் தெற்குச் சீமையையும் சிலிர்க்க வைக்க வருகிறார். ஆகஸ்டில் பொம்மலாட்டமும், சினிமாவும் ஒரு சேர கலக்க வருகிறதாம்.
இனிய தமிழ் மக்களே,வருகிறார் உங்கள் ராசா, ரசிக்க ரெடியாகிக்குங்க!


Click it and Unblock the Notifications











