3 பேர் உயிரை காப்பாற்ற பெண் வக்கீல்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்- டி.ராஜேந்தர், பாரதிராஜா நேரில் ஆதரவு

இவர்களின் இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நடிகர் டி.ராஜேந்தர், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது தண்டனையை குறைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற பெண் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் கடந்த 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று அவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. கடந்த 3 நாட்களில் தண்ணீர் மட்டும் அருந்துவதால் அவர்கள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டனர். உட்கார முடியாமல் படுத்தபடி இருந்தனர். அவர்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று காலை லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் மன்சூர் அலிகான், கருணாஸ், பாடலாசிரியர் முத்துக்குமார், குன்னங்குடி அனிபா ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
நேற்று மாலையில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினர்.
பாரதிராஜா நேரில் ஆதரவு:
இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்போதும் தீர்வாகாது. தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் தொடரட்டும், வெற்றி பெறட்டும் என்றார்.
மேலும், உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். தமிழக அரசை வலியுறுத்தியும், 3 பேர்களை காப்பாற்றக்கோரி இறந்த செங்கொடியின் கனவை நனவாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியும், தூக்கு கயிற்றின் முன்னால் நின்றும் போராட்டங்களை நடத்தினர்.


Click it and Unblock the Notifications











