என்ன பத்தி அவர்கிட்டையும் அவர் பத்தி என்கிட்டையும் தப்பா சொல்லியிருந்தாங்க... கார்த்தி பற்றி பாண்டிராஜ்
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய படம் எதற்கும் துணிந்தவன்.
இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய குருநாதர் சேரன், நடிகர் வடிவேலு, இம்சை அரசன் திரைப்படம், தன்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் என்று பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் பணிபுரிந்த போது தனக்கும் கார்த்திக்கும் இருந்த பயத்தை பற்றி அதில் கூறியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்
சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி முதன் முதலில் நடித்த படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி நிறுவனத்தில் ஏற்கனவே பசங்க 2 திரைப்படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்குநராக ஒப்பந்தமானார். அந்தப் படத்தில் நிறைய நடிகர்கள் இருந்ததால் பட்ஜெட் அதிகமாக ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்களாம் தயாரிப்பு நிறுவனம்.

படமே வேண்டாம்
அப்பா கதாபாத்திரத்திற்கு தனது முதல் சாய்ஸாக இருந்த நடிகர்கள் சத்யராஜ் அல்லது ராஜ்கிரன். பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்ததால் சற்று பெரிய கதாபாத்திரத்தை எதிர்பார்த்திருந்த சத்யராஜிற்கு அந்தக் கதாபாத்திரம் திருப்தி தரவில்லையாம். அதேபோல சம்பள பிரச்சனை காரணமாக ராஜ்கிரனும் அந்தப் படத்தில் அப்போது ஒப்பந்தமாகவில்லையாம். வேறு யாராவது சாதாரண நடிகரை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னபோது இந்தப் படத்தை கைவிட்டு விடலாம் என்று ஒரு கட்டத்தில் கூறினாராம் பாண்டியராஜ். பிறகு சிவகுமார் தலையிட்டு சத்யராஜிடம் பேசி நீதான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் விடாப்பிடியாக இருக்கிறார். எனக்காக நடித்துக் கொடு என்று சொன்னாராம்.

மனமிறங்கிய சத்யராஜ்
தன்னை சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்திய சிவகுமார் இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக இப்படி கேட்டுவிட்டார் என்பதற்காகவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சத்யராஜ் சில நாட்களிலேயே இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை நல்லவேளை நான் தவற விடவில்லை என்று கூறும் அளவிற்கு சத்யராஜ் மாறினார் என்று பாண்டிராஜ் கூறியுள்ளார். இதேபோல படம் ஒப்பந்தமாவதற்கு முன்னர் கார்த்தியுடன் பணிபுரிய போகிறீர்களா? அவர் நொய் நொய் என்று கேள்வி கேட்டு சாவடிப்பார் என்று பாண்டிராஜிடம் சிலர் பயமுறுத்தி இருந்தார்களாம்.

கார்த்தியும் பயந்துள்ளார்
அதேபோல கார்த்தியிடமும் பாண்டியராஜை பற்றி பயமுறுத்தி இருக்கிறார்கள். செட்டில் எதற்கு எடுத்தாலும் கத்துவார் என்று யாரோ சொல்லி இருப்பார்கள் போல. அதனால் தயக்கத்துடன்தான் அவர் நடிக்க வந்ததாகவும் ஷூட்டிங் 10 நாட்கள் நடந்த நிலையில் அவராகவே வந்து நாம் மீண்டும் ஒரு படத்தில் பணி புரியலாம் என்று கூறியதாகவும் அதன் பின்னர் அவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி உண்டானதாகவும் படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததாகவும் பாண்டியராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











