மக்களின் மனம் கவர்ந்த ‘கருப்பு வைரம்‘… விஜயகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல் !
சென்னை : தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு கருப்பு வைரம் தான் விஜய்காந்த். தமிழக மக்களின் மனங்களில் நிறைந்து இருந்த விஜய்காந்த் அரசியல், சினிமா என இரு துறைகளிலும் கடினமாக உழைத்து சாதித்துள்ளார்.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவர் கடந்து வந்த பாதை முட்பாதைகளாகவே இருந்தன. இதையும் சாதூர்யமாக வென்றெடுத்த நாயகன் விஜய்காந்த்.
இன்று இவர் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்..

சினிமா மீது காதல்
சினிமா ஆசையால் சென்னைக்கு வரும் லட்சக்கணக்கானவர்களில் விஜய்காந்தும் ஒருவர். சினிமா மீது இருந்த காதலால், மதுரையிலிருந்து சென்னை வந்த விஜயகாந்த் பல அவமானங்களை சந்தித்தார். அவரின் நிறத்தை பற்றி பலரும் கேலியாக பேசினர். உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பிய விஜய்காந்திற்கு நிறம் ஒரு தடையாக இல்லை. ஜெயிப்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த நிறமே தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தியது.

வில்லனாக
எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகனாக சுதாகர் நடித்திருந்தார். இதையடுத்து, ஆர் செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தூரத்து இடிமுழக்கம்
விஜய்காந்தின் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது தூரத்து இடிமுழுக்கம். கே.விஜயன் தயாரித்து இயக்கிய இப்படம், மீனவர்களின் வாழ்வை மையப்படுத்தப்பட்டு இருந்தது. படத்துக்கு சலீம் சௌத்ரி இசையமைத்து இருந்தார். பாடல்களை எழுதியிருந்தவர் கு.மா.பாலசுப்ரமணியன். 1981-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் இது.

சட்டம் ஒரு இருட்டறை
சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் முதல் வெற்றிகரமான படம் எனலாம். நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.

ஏராளமான படங்களில்
சிவப்பு மல்லி , நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுப்பக்கம், சிவந்தகண்கள், பட்டணத்து ராஜாக்கள், ஓம்சக்தி, ஆட்டோ ராஜா, சாட்சி,நூறாவது நாள், தீர்ப்பு என் கையில் , வெள்ளைப்புறா ஒன்று என 84ம் ஆண்டில் கிட்டத்தட்ட 14 திரைப்படங்கள் வெளியாகின.

ஃபிலிம்பேர் விருது
விஜய்காந்திற்கு மற்றுமொரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது வைதேகி காத்திருந்தாள். அதேபோல, அம்மன் கோவில் கிழக்காலே படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை விஜயகாந்த் பெற்றார். இரண்டு படங்களிலும் இளையராஜாவின் இசையிலான பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.

ஊமை விழிகள் முக்கிய ரோல்
எல்லோருக்கும் உதவுபவராகத் திரைப்படத்தில் நடிப்பதைவிட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகப் பிறருக்குத் தன்னால் இயன்றவரை உதவினார் விஜயகாந்த். நடிகை வடிவுக்கரசிக்காக அன்னை என் தெய்வம் படத்தில் நடித்தார். அதேபோல, திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஊமை விழிகள் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் விஜயகாந்த். 1986ஆம் ஆண்டு வெளியான இந்த படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

100வது படம்
விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் இந்த படத்தின் பெயர் இன்றளவு நிலைத்து உள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு நேர்மையான அதிகாரியாக நடித்து அனைவரையும் வசீகரித்தார். இந்த படம் வெள்ளிவிழா கண்டு விஜயகாந்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது.

இளம் தலைமுறைக்குமுன்னுரிமை
வெற்றி நாயகனாக வலம் வந்த விஜயகாந்த் புதிய இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். திரைப்படக் கல்லூரியில் இருந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார். பெரிய வெற்றியை சந்திக்காத நாயகர்கள் விஜயகாந்த் படத்தில் இணைந்து நடித்து அறிமுகமாயினர். மற்றொரு நடிகருடன் சேர்ந்து நிற்க அனுமதிக்காத நடிகர்கள் மத்தியில், பல நடிகர்களின் சினிமா வாழ்க்கைக்கு பெரிதும் உதவினார் விஜயகாந்த் என்ற கருப்பு வைரம்.

திருமணம்
1990ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்
2005ல் தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.

69வது பிறந்த நாள்
விஜயகாந்த் நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பில் இருந்தபோதும் அந்த துறை வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்று விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











