ஸ்பெஷல்ஸ்
சென்னையில் உள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் திமுகவைச் சேர்ந்த 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பா.ஜ.க. ஆட்சியில் எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பாஜகவினர் இங்கு கோலோச்சினர். சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத சில பாஜகவினர் கூட சென்சார் போர்ட்டை ஆக்கிரமித்திருந்தனர்.
இப்போது மத்தியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் பல நியமனப் பதவிகளை பிடித்து வருகிறது.
முதலில் மத்திய அரசு வழக்கறிஞர்களாக திமுகவைச் சேர்ந்தவர்களே அதிகமான அளவில் நியமிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக நாட்டில் உள்ள துறைமுகங்களின் நிராவாகப் பொறுப்புக் கழகங்களில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில், சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரிய (சென்சார் போர்டு) உறுப்பினர்கள் நியமனத்திலும் திமுகவினர் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளனர்.
இப்போது மொத்தம் உள்ள 42 உறுப்பினர்களில் 15 பேர் திமுகவினர் அல்லது திமுகவின் தீவிர ஆதரவாளர்களே ஆவர். அவர்களது பெயர் விவரம்:
இயக்குனர் ராம நாராயணன் (கருணாநிதியின் தீவிர ஆதரவாளர், கருணாநிதியின் வசனத்தில் மண்ணின் மைந்தன் படத்தை எடுத்து வருகிறார்)
நடிகர் தியாகு (திமுகவின் பிரச்சார பீரங்கி)
சா. கணேசன் (திமுக முன்னாள் சென்னை மேயர்)
ஏ.ஏ.ஜின்னா (திமுக மாணவர் அணித் தலைவர்)
வி.வி.கல்யாணசுந்தரம் (சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்)
கயல் தினகரன் (திமுக இலக்கிய அணிச் செயலாளர்)
வசந்தி ஸ்டான்லி (மகளிர் அணிச் செயலாளர்)
பூச்சி முருகன் (அண்ணா அறிவாலய நிர்வாகிகளில் ஒருவர்)
ஜெயஸ்ஸ்ரீ சுந்தர் (சன் டிவி செய்தி வாசிப்பாளர், முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதனின் பேத்தி)
நிர்மலா சுரேஷ் (தீவிர திமுக ஆதரவாளர்)
கவிஞர் மு.மேத்தா ( திமுக அனுதாபி)
சொர்ணம் (கருணாநிதியின் உறவினர்) ஆகியோர்.
இவர்களைத் தவிர நக்கீரன் இணை ஆசிரியர் ஏ.காமராஜ், இந்து பத்திரிக்கை நிருபர் குணசேகரன் ஆகியோரும் பத்திக்கையாளர்கள் சார்பாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்தா சீனிவாசனுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. தொழிலதிபர் நல்லி குப்புச்சாமி செட்டியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கூடாது, படங்களில் ஆபாசம் கூடாது, வன்முறை கூடாது என்று திமுக கூட்டணியில் உள்ள பாமக கூறி வருகிறது, போராட்டம் நடத்தி வருகிறது.
இந் நிலையில் தணிக்கை வாரியத்தில் திமுகவைச் சேர்ந்த ஏராளமான பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications











