இப்ப சந்தோஷமா சேரன்!
தேசிய விருதுக் குழுக்களை தொடர்ந்து சாடி வரும் இயக்குநர் சேரன் தற்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார். அவரது ஆடும் கூத்து மற்றும் தவமாய் தவமிருந்து ஆகிய இரு படங்களுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளதே இதற்குக் காரணம்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தேசிய திரைப்பட விருதுகளைத் தேர்வு செய்யும் முறையை வறுத்து எடுத்து விடுவார் சேரன். இந்திக்காரர்களுக்கே விருதா என்று குமுறித் தள்ளுவார். அவரது கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் பெரும்பாலும் இந்திக்காரர்களுக்கும், பெங்காலிக்காரர்களுக்கும்தான் விருதுகள் போகும்.தப்பித் தவறி தெற்கத்திப் பக்கம் விருது கொடுக்க முடிவு செய்தால் அதில் பெரும்பாலானவற்றை மலையாளமே அள்ளிக் கொண்டு போகும். எப்ேபாதாவது தமிழுக்கும் உரிய அங்கீகாரம், கெளரவம் கிடைப்பதுண்டு.
இந் நிலையில்தான் சேரனின் குமுறல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல அவர் சம்பந்தப்பட்ட இரு படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சேரன் நடித்த ஆடும் கூத்து தமிழிலேயே சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. அவரது தவமாய் தவமிருந்து படத்திற்கு சிறந்த குடும்பப் படத்திற்கான விருது கிடைத்துள்ளது. ஒன்றுக்கு ரெண்டு அவார்டாக கொடுத்து சேரனின் வாயை மூடியுள்ளது தேசிய திரைப்பட விருதுக் கமிட்டி.
இந்த இரு விருதுகள் குறித்தும் சேரன் கூறுகையில், தமிழ் ரசிகர்களுக்கு இந்த விருதுகளை அர்ப்பணிக்கிறேன். தவமாய் தவமிருந்து படம் போல மேலும் பல நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இந்த விருதுகள் கொடுத்துள்ளன.
படத் தயாரிப்பில் இருந்தபோதே இந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். எனக்கு தேர்வு முறை மீது சிறிய வருத்தம் உண்டு. அது இன்னும் கூட இருக்கத்தான் செய்கிறது.
ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என நினைத்தன். ஆனால் கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற அங்கீகாரங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் சேரன்.
இப்ப சந்தோஷமா!


Click it and Unblock the Notifications











