ஸ்பெஷல்ஸ்
வெள்ளித் திரையின் மறக்க முடியாத சோதனை ஆண்டுகளின் வரிசையில் 2002ம் சேர்ந்து கொண்டுள்ளது.
எத்தனை பிளாப்கள், எத்தனை நஷ்டங்கள், எத்தனை இடர்பாடுகள், எத்தனை சோகங்கள் என பட்டியலிட முடியாத அளவுக்கு பயங்கர தடுமாற்றங்களைச்சந்தித்து சோர்ந்துள்ளது கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ்த் திரையுலகம்.
2001ம் ஆண்டை விட கடந்த ஆண்டு அதிக படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒரு படம் கூட வெள்ளிவிழா காணவில்லை என்பது வருத்தம் தரும் உண்மை. பெரிய, பெரிய ஹீரோக்களும் கூட மண்ணைக் கவ்வியுள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், நல்லதை வரவேற்கவும், புருடா படங்களை தூக்கி எறியவும் ரசிகர்களுக்குத்தெரிந்து விட்டதும், விசிடிக்கள் சக்கை போடு போடுவதும், நல்ல தயாரிப்பாளர்கள் குறைந்து விட்டதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
2001ல் 187 நேரடித் தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் 2002ல் இது 193 ஆக இருந்தது.
கதையை நம்பாமல் சதையை நம்பிப் படம் எடுத்தவர்களுக்கு பெருத்த லாபம் கிடைத்தது 2002ல். குறிப்பாக வெறும் 50 லட்சம் ரூபாய் செலவில்எடுக்கப்பட்ட துள்ளுவதோ இளமை ரூ. 8 கோடி வசூலைப் பார்த்தது. தெலுங்கு உரிமை மூலம் மேலும் சில கோடிகள் வரை பார்த்தார் தயாரிப்பாளர்அண்ட் இயக்குனர் கஸ்தூரி ராஜா. விளைவு, தொடர்ந்து அது மாதிரியான படங்களின் அலை வீசத் தொடங்கியுள்ளது.
2002ல் தமிழ்த் திரையுலகம் குறித்த ஒரு பின்னோக்குப் பார்வை ..
100 நாட்கள் ஓடிய படங்கள்
- ரன்
- ஜெமினி
- துள்ளுவதோ இளமை
- பஞ்சதந்திரம்
- பம்மல் கே. சம்பந்தம்
- பாபா
- அழகி
- தமிழன்
- யூத்
- கன்னத்தில் முத்தமிட்டால்
- புன்னகை தேசம்
- உன்னை நினைத்து
- ரோஜாக் கூட்டம்.
ரொம்ப காலமாக காதலித்துக் கொண்டே இருந்த ரோஜாவும், செல்வமணியும் ஒரு வழியாகத் திருமணம் செய்து கொண்டார்கள். இளசுகளின் மனசுகளில்கொலு வீற்றிருக்கும் நாயகன் ஷாம், திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு கணிசமான ரசிகைகளை இழந்தார்.
சுவலட்சுமி, கஸ்தூரி, ராஜேஸ்வரி, சுவர்னமால்யா, அஞ்சு, கனல் கண்ணன் (2வது கல்யாணம்), ஹீரா, சம்யுக்த வர்மா ஆகியோரும் கல்யாண வலையில்சிக்கிய மற்ற கலைஞர்கள்.
புதுகங்களின் அணிவகுப்பு:
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டுதான் அதிகம் பேர் அறிமுகம் ஆனார்கள்.
நடிகர்கள் வரிசையில் ஸ்ரீகாந்த், ரகுவண்ணன், நந்தா, தனுஷ், கிருஷ்ணா, ஜீவன் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நடிகைகள் வரிசையில், சினேகா, கிரண், ஷெரீன், ரதி ஆகியோர் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர்களில் முக்கியமானவர்கள்.
இப்போதைய முன்னணி நடிகை சினேகா தான். அடுத்தவர் கிரண்.
இவர்கள் தவிர திரிஷா, மீரா ஜாஸ்மின் ஆகியோரும் அதிகம் பேசப்பட்ட புதுமுகங்கள் ஆவர். எல்லோரையும் விட அதிகம் பேசப்படுபவர் ஜெமினிகிரண்தான். சிம்ரனுக்கு அடுத்து பஞ்சாபிலிருந்து இறக்குமதியாகி இருக்கும் சாப்ட் சப்பாத்தி இவர். 2003ல் ஒரு ரவுண்டு வருவார்.
ஸ்ருதிகா, கனிஹா, சம்யுக்தவர்மா, பிரியங்கா திரிவேதி, ஆஷிமா பல்லா, பிரியா கில், ஷமீதா ஷெட்டி (சில்பா ஷெட்டியின் தங்கை), நந்திதா தாஸ், பிரியங்காசோப்ரா, அனிதா ஆகியோர் மற்ற புது முகங்கள்.
உதிர்ந்த மலர்கள்:
பழம் பெரும் நடிகர் வி.கே.ராமசாமியின் மறைவு இந்த ஆண்டு திரையுலகின் மிகப் பெரிய சோகமாக அமைந்தது.
இதுதவிர மோனல், பிரதியுக்ஷா ஆகியோரின் தற்கொலைகளும் திரையுலகை உலுக்கின.
இவர்கள் தவிர நடிகை தேவிகா, நடிகர்கள் ஒருவிரல் கிருஷ்ணா ராவ், சொக்கலிங்க பாகவதர், இசையமைப்பாளர் மகேஷ், சக்கரவர்த்தி. கேமராமேன்பிரகாஷ் ஆகியோரும் 2002ல் மறைந்தனர்.


Click it and Unblock the Notifications











