தமிழ் சினிமா பற்றி ஏ டூ இசட்... வசனகர்த்தா அஜயன் பாலாவின் ஆஹா புக்
சென்னை: தமிழ் சினிமா வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா.
சரத்குமார், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள், உதயநிதி, ஹன்சிகா நடித்த மனிதன், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியிருப்பவர் அஜயன் பாலா.
தற்போது அமீர்ன் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு எழுதி வருகிறார். விஜய் இயக்கிய மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா வரலாறு
இவர், நடிக நிலம் என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை சென்னையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தமிழ் சினிமா வரலாறு பற்றி விரிவான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், நடிகர்கள் சிவகுமார், நாசர் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

முழுமையான வரலாறு
இந்தப் புத்தகம் பற்றி அஜயன் பாலா கூறும்போது, தமிழ் சினிமா வரலாறு பற்றிய முழுமையான புத்தகமாக இது இருக்கும். இதற்கு முன் வந்திருக்கும் புத்தகங்களில் கட்டுரைகள்தான் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இது, சுதந்தரத்துக்கு முந்தைய காலகடத்தில் நடித்த நடிகர்கள், அவர்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

தெரியாத தகவல்கள்
1916-ல் இருந்து தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தொகுத்திருக்கிறேன். மவுன சினிமா காலகட்டத்தில் வந்த தமிழ்ப் படங்கள், அந்த படங்கள் பற்றிய விரிவான தகவல்கள், அடுத்து சினிமா பேசியபோது நடந்த மாற்றங்கள், விடுதலைக்கு முன் தமிழ் சினிமா உட்பட பல அறியப்படாத தகவல்கள் இதில் உள்ளன.

நான்கரை ஆண்டுகள்
இந்த புத்தகத்துக்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமான புத்தகமாக இருக்கும். எனது நாதன் பதிப்பகம் சார்பாக வெளியிடுகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











