முல்லை மலரச் செய்த இயக்குநர் மகேந்திரன்.. பிறந்தநாள் பதிவு
சென்னை : தமிழின் சிறந்த படங்களை கொடுத்த இயக்குநர் மகேந்திரன் என்பது கோலிவுட்டின் எழுதப்படாத விதி.
தற்போது வரையில் இவரைத் தாண்டி சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்கள் ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம்.
அந்த வகையில் சிறப்பான படங்களை கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் படம்
முள்ளும் மலரும் படம் மூலம்தான் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார் இயக்குநர் மகேந்திரன். முன்னதாக சில படங்களுக்கு திரைக்கதை எழுதியிருந்தாலும் அவை அந்த அளவிற்கு அவருக்கே திருப்தியை தந்திருக்கவில்லை. அவர் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படமே அவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது.

ரஜினி என்ற நடிகர்
முன்னதாக ஆடுபுலி ஆட்டம், மோகம் முப்பது நாள் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய போது கமல், ரஜினி போன்றவர்களின் அறிமுகம் கிடைத்த நிலையில் அதைக்கொண்டே முள்ளும் மலரும் படத்தில் ரஜினியை ஹீரோவாக்கி அவருக்குள் இருந்த நடிகரை வெளியில் கொண்டு வந்திருந்தார் மகேந்திரன்.

கெட்டப் பையன் சார் இந்த காளி
முள்ளும் மலரும் படம் ரஜினியின் கேரியர் பெஸ்டாக அமைந்தது. கெட்டப் பையன் சார் இந்த காளி என்று சரத்பாபுவை பார்த்து ஸ்டைலாகவும் அலட்சியமாகவும் ரஜினி பேசும் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ஷோபா என்ற சிறப்பான நடிகையை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது.

உமா சந்திரன் நாவல்
உமா சந்திரனின் நாவலை மையமாக கொண்டு வெளியானது முள்ளும் மலரும் படம். தொடர்ந்து புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதையை திரைக்கதையாக்கி வெளியான படம்தான் உதிரிப்பூக்கள். இந்தப் படம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் விஜயன், அஸ்வினி உள்ளிட்டவர்கள் அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருந்தனர்.

கதை பேசிய பாடல்கள்
பாடல்களும் கதை பேசுமா என்பதை இந்தப் படத்தின் அழகிய கண்ணே பாடல் சிறப்பாக வெளிப்படுத்தியது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளுடன் எவ்வளவு இனிமையாக பொழுதை கழிக்க முடியும், அன்பு பாராட்ட முடியும் என்பதை அழகான காட்சிகளால் நிறைவு செய்திருந்தார் மகேந்திரன். அவ்வளவு அழகான காட்சிகள் இந்த பாடலுக்கு அமைந்தன.

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்
தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர் பஞ்சாயத்து என வரிசையாக படங்களை இயக்கினார் மகேந்திரன். இவற்றில் பல படங்கள் உலகத்தரத்தில் அமைந்தன. இதில் நண்டு, பூட்டாத பூக்கள் போன்ற படங்களும் சிறப்பானவையாக அமைந்தபோதிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவில்லை.

சாசனம் படம்
கடந்த 2006ல் சாசனம் என்ற படத்தை இயக்கினார் மகேந்திரன். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ரஞ்சிதா நடித்திருந்தனர். இயக்கத்திற்கு இடையில் சில படங்களுக்கு மீண்டும் திரைக்கதையையும் எழுதினார் மகேந்திரன். பலரது நடிப்புத் திறமையை வெளியில் கொண்டுவந்த மகேந்திரன் சில படங்களில் நடிக்கவும் செய்திருந்தார்.

மிரட்டலான நடிப்பு
அவரது மிரட்டலான நடிப்பில் வெளியான தெறி உள்ளிட்ட படங்கள் அவரது இறுதிக்காலங்களில் அவர் நமக்குக் கொடுத்த பரிசு. மகேந்திரனின் 83வது பிறந்தநாளை இன்றைய தினம் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தன்னுடைய வளர்ச்சி அதிகமானோர் காரணமாக அமைந்ததாக அவர் எப்போதும் கூறுவார்.

சோதனைகளை சாதனையாக்கிய இயக்குநர்
அலெக்சாண்டர் என்ற பெயரைக் கொண்ட மகேந்திரன், குறை மாதத்தில் பிறந்ததால் இளம் வயதில் நோஞ்சானாகவே இருந்துள்ளார். எதற்கும் உபயோகப்பட மாட்டார் என்று அவரது பெற்றோரே நினைத்த நிலையில், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து தன்னுடைய பெஸ்ட்டை வெளியில் கொண்டு வந்தவர் மகேந்திரன்.

எளிமையான மனிதர்
தமிழின் பெஸ்ட் படங்களை கொடுத்த மகேந்திரன், மிகவும் எளிமையான மற்றும் வெளிப்படையான மனிதர் என்ற பெயரை திரைத்துறையில் பெற்றவர். ஒரு மனிதனால் இப்படிப்பட்ட காட்சி அமைப்புகளையும் திரைக்கதையையும் வைத்து படங்களை இயக்க முடியும் என்பதை நிரூபித்தவர் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











