மணிரத்னம் படைப்புகள் பல கதைகளை சொல்லும்..லாக்டவுன் ஸ்பெஷல் மூவிஸ்!
சென்னை : தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குனர் என்று சொன்னால் மணிரத்னம் அவர்களை சொல்லலாம். ஏன் என்றால், அவர்கள் படைப்புகள் ஒன்வொன்றும் பல கதைகளை சொல்லும். அதற்கு உதாரணமாக கன்னத்தில் முத்தமிட்டால், அஞ்சலி, பாம்பே என பல படங்களை சொல்லலாம்.
இலங்கை தமிழர்களையும் அவர்களின் வேதனைகளையும் அழகாக ஆழகாக சொல்லியது மட்டுமில்லாமல், தாயை பிரிந்த ஒரு குழந்தையின் வலியையும் அழகாக சொல்லி இருப்பார் இயக்குனர் மணிரத்னம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைபடத்தில் ஒருகாட்சி, தன்னுடைய பெற்றோர் வளர்ப்புப்பெற்றோர் என அறிந்த குழந்தை அமுதா தன்னுடைய உண்மையான தாயை காணும்போது அவளுக்கு காட்டவென்று ஒரு டைரியை எழுதி அதில் படங்களை ஒட்டி வைத்திருப்பாள். தனக்கும் தனது உண்மையான தாய்க்கும் இடையேயான ஒரு வடிகாலாக அதை நினைத்திருக்கும் அந்த குழந்தை. உண்மையான தாயைக் காணும் போது அதனைக்காட்டி சந்தோசப்பட நினைத்திருக்கும்.
அந்த டைரி அவளின் தம்பி கைக்கு கிடைத்ததும் அவளின் எதிர்ப்பையும் மீறி அவன் படிப்பான். "ஏன் என்னை விட்டுட்டு போனம்மா?" என அமுதா தன் தாயிடன் முறையிட்டு எழுதியிருப்பாள். அதைப்படித்த தம்பி உடனே "பாத்ரூம் வந்திருக்கும் போயிருப்பாங்க" என டக்கென்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான் இதுதான் இதுதான் குழந்தைகள் உலகம். இதனை படு கச்சிதமாக காட்சிபடுத்தியிருப்பார் மணிரத்னம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் கதாபாத்திரங்களும் கூட அமுதா வாயிலாகவே நமக்கு அறிமுகமாவார்கள்.படு நேர்த்தியான பகுதி அது.
அஞ்சலி படத்தில் குழந்தைகளின் உலகம் மிகச்சிறப்பாக காட்டப்பட்டிருக்கும். நாம் நினைத்திருக்கும் குழந்தைகளின் உலகத்திலிருந்து அது வேறுபட்டிருக்கும். படத்தில் வரும் குழந்தைகள் "ஏங்க அங்கிள் குழந்தையெல்லாம் எப்படி பொறக்குது?" என்ற விவகாரமான கேள்விகளை சாதாரணமாக கேட்பார்கள். காதல் விவகாரங்களை கண்காணிப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த படத்தை விமர்சித்து பல பத்திரிகைகள் பல விதமாக எழுதினார்கள். உண்மையில் குழந்தைகளின் உலகம் என்பது நாம் வரையறுத்து வைத்திருப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மிகச்சாதாரணமாக கள்ளங்கபடமில்லாத குறும்புத்தனமும், அதேசமயம் பெரியவர்களைவிட படுசாமர்த்தியமான பெரிய மனுசத்தனமும் ஒன்றுடன் அமைந்தது குழந்தைகளின் உள்ளம். அதை இயல்பாகவும் நேர்த்தியாகவும் திரையில் காட்டியவர் மணிரத்னம்.

மணிரத்னம் என்ற பெயரை அறியாதவர்கள் கூட அஞ்சலி படம் பார்த்து சிலாகித்திருக்கிறார்கள். கிராமங்களில் உள்ளவர்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்த படங்களில் பிடித்தவைகளில் அஞ்சலியும் ஒன்று. மணிரத்னத்தின் வேறு எந்த படம் டிவியில் ஓடினாலும் இந்த படம் யார் டைரக்டர் தெரியுமா ? அஞ்சலி படம் இயக்குனவரு என்று குழந்தைகளிடம் பெருமையாக சொல்லுபவர்கள் இன்னமும் உண்டு.

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி , சின்ன கண்மணி கண்மணி கண்மணி என்ற பாடல் வரிகள் கேட்கும் 80ஸ், 90ஸ் கிட்ஸ் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்கள் மனதில் இன்னமும் குழந்தைத்தனம் பொங்கி வருவதையும் ஆனந்தப்படுவதையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். மணிரத்னம் ஒரு மெஜஸ்டிக் இயக்குனர் என்பதற்கு இவை எல்லாமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனையோ மாற்று கருத்து அவர் மேல் சொல்ல பட்டாலும் ஒரு நல்ல படைப்பாளியின் உழைப்பு காலத்திற்கும் நிற்கும் என்பது தான் உண்மை

மணி சார் ரசிகர்கள் என்று சொல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் அவர் படங்களை பார்த்து கொண்டு தான் இருக்கினர். அவர்கள் மனதில் ஏற்பட்ட எதோ ஒரு பாதிப்பு, ரியாலிட்டி எதார்த்தங்களை கையாளுதல் இவை எல்லாம் மணி சாரின் சக்சஸ். லாக் டவுன் சமயத்தில் அவர் படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் அவர் வெற்றி பெற்று கொண்டே தான் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











