இந்திய சினிமாவின் பிரம்மாண்ட டைரக்டர்....ராஜமெளலி பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை : டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி. அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் ராஜமெளலி.
Recommended Video
ராஜமெளலி இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அஜய் தேவ்கன், ராம் சரண், ஆலியா பட், ஜுனியன் என்டிஆர் உள்ளிட்ட இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ராஜமெளலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டைரக்டராக அறிமுகம்
தெலுங்கு டைரக்டரான ராஜமெளலி, தெலுங்கில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால், தொடர்ந்து பல படங்களை தானே திரைக்கதை எழுதி, இயக்க துவங்கினார். 2009 ம் ஆண்டு இவர் இயக்கிய மகதீரா படம் மிகப்பெரிய ஆக்ஷன், வரலாற்று படமாக அமைந்தது. இது தமிழிலும் டப் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகுபலியின் வசூல் சாதனை
அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் வித்தியாசமான கதையாக பிரம்மாண்ட வெற்றி பெற்றன. அதிலும் பாகுபலி இரண்டு பாகங்களும் உலக அளவில் வசூல் சாதனை படைத்தன. பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த படம் பார்க்கப்படுகிறது. இந்த படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.1810 கோடியை வசூலித்தது. இதுவரை எந்த இந்திய சினிமாவும் செய்யாத சாதனையை பாகுபலி செய்தது.

எதிர்பார்ப்பை கிளப்பிய ஆர்ஆர்ஆர்
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பான் இந்தியன் படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பாகுபலி பட அளவிற்கு இந்த படமும் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இது 1920 களில் நடப்பது போன்ற நட்பை மையமாகக் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் டாப் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற டைரக்டர்
ஆரம்பத்தில் டிவி சீரியல்கள் இயக்கி வந்த ராஜமெளலி படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவின் டாப் டைரக்டர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். ராஜமெளலி இதுவரை 3 தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 5 மாநில நந்தி விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி 2016 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கெளரவித்தது. இவர் இயக்கிய நான் ஈ படத்தின் தெலுங்கு பதிப்பான ஈகா, பாகுபலி இரண்டு பாகங்களும் இவருக்கு தேசிய விருதினை பெற்று தந்தன.

நடிகர், தயாரிப்பாளர்
ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தை தவிர இவர் இயக்கி அனைத்து படங்களுக்கும் இவரே தான் திரைக்கதை அமைத்துள்ளார். இது தவிர பாகுபலி முதல் பாகம், அண்டல ராக்ஷஷி ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இது தவிர Sye, Rainbow, Eega, Majnu, Baahubali : The Beginning ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்திலும் ராஜமெளலி நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











