டைரக்டர் சங்கர் நம்பர் ஒன் காமெடி நடிகராகியிருப்பார்... சிங்க முத்துவின் ஃப்ளாஷ் பேக் பேட்டி
சென்னை: நடிகர் வடிவேலுவின் திரைப்படங்களில் பல நகைச்சுவை காட்சிகளில் அவருடன் பயணித்தவர் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. பல காமெடி காட்சிகளை தான் எழுதிக் கொடுத்துள்ளதாகவும் சிங்கமுத்து கூறுவார்.
அதன் பிறகு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். வடிவேலு மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் சிங்கமுத்து.
இந்நிலையில் இயக்குநர் சங்கர் துணை இயக்குநராக இருந்தபோது நடந்த சம்பவத்தைப் பற்றி சுவாரசியமான பல சம்பவங்களை சிங்கமுத்து கூறியிருக்கிறார்.

இயக்குநர் சங்கர்
ஆரம்ப காலகட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், பின்னர் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் பணிபுரிந்து அதன் பின்னர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார் சங்கர். எஸ்.ஏ.சி படங்களில் அவ்வப்போது சில நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சங்கர் நடித்திருப்பார்.

சிங்கமுத்து
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், நடிகர் சிங்கமுத்து தனியாக டீ கடை ஒன்றையும் நடத்தி வந்தாராம். அப்போது துணை இயக்குநராக இருந்த காலகட்டத்தில் சங்கரும் அந்தக் கடைக்கு டீ குடிக்க வந்ததாகவும், சிங்கமுத்துவிற்கு ஜோசியம் பார்க்கும் பழக்கமும் இருந்ததால் சங்கருக்கு ஜோசியம் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போதே,"நீங்கள் பெரிய இயக்குநராக வருவீர்கள்" என்று சிங்கமுத்து சொல்ல அதெல்லாம் நடக்கும்போது பாத்துக்கலாம்ணே என்று சங்கர் கூறுவாராம்.

நல்ல நடிகர்
ஒரு இயக்குநராகும் தன்மையை சங்கரிடம் தான் பார்த்திருந்தாலும், அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர். ஒரே படத்திற்காக இருவரும் சேர்ந்து டப்பிங் கூட பேசி இருக்கிறார்களாம். ஒருவேளை நடிக்க வந்திருந்தால் அவர் டாப் நகைச்சுவையை நடிகராக மாறி இருப்பார் என்று சிங்கமுத்து அவரது நடிப்புத் திறமையை பற்றி கூறியுள்ளார். எந்திரன் படத்தின் ப்ரோமோஷனல் கூட "ஆடு" போல கத்துவதை இயக்குநர் சங்கர்தான் தனக்கு சொல்லிக் கொடுத்ததாகவும், அவரை பேட்டி எடுக்கும் போது அதனை செய்து காட்டும்படி கேளுங்கள் எனவும் ரஜினிகாந்த் அந்தச் சமயத்தில் கூறியிருப்பார்.

பிரம்மாண்ட இயக்குநர்
அப்போதே சங்கருக்கு அதிகமான வைராக்கியம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். இயக்குநர் ஆக வேண்டும் என்ற லட்சியம் அவரிடம் அதிகமாகவே இருந்தது. அவர் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமான இயக்குநராக வருவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் சிங்கமுத்து அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூரியிருக்கிறார். நடிப்பில் என்னதான் ஆர்வம் இருந்தாலும் இதுவரை சிவாஜி படத்தில் ஒரே ஒரு பாட்டில் மட்டுமே சங்கர் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











