மறுபடியும் வருகிறார் ஃபாசில்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார் இயக்குநர் ஃபாசில். இந்த முறை அவர் இயக்கப் போகும் படத்தை மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.
மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வெற்றி பெற்றவர் ஃபாசில். அருமையான பல படங்களை இரு மொழிகளிலும் கொடுத்து திரை ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர்.
தமிழில் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் (கண்ணுக்குள் நிலவு தவிர) வெற்றிப் பெற்ற படங்கள். சாதாரண வெற்றியாக இல்லாமல், மெகா ஹிட்டான படங்கள் இவை.
இடையில் சில காலம் தமிழ் பக்கம் வராமல் இருந்தார் ஃபாசில். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழுக்கு மீண்டும் வருகிறார் ஃபாசில்.
இந்த முறை ஃபாசிலின் நாயகனாகவிருப்பவர் பிருத்விராஜ். ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் இப்படத்தை உருவாக்கவுள்ளார் ஃபாசில். வழக்கம் போல இந்தப் படத்திற்கும் ஃபாசிலின் மனம் கவர்ந்த இளையராஜாதான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா இல்லாமல் தமிழில் நான் படமே இயக்க மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பவர் ஃபாசில் என்பது நினைவிருக்கலாம். அதேபோல சபதம் எடுத்திருக்கும் இன்னொருவர் பாலுமகேந்திரா.
குடும்பக் கதைகளை வைத்துத்தான் ஃபாசிலின் படங்கள் அமையும். அதே போல இந்தப் புதிய படமும் குடும்பக் கதையை மையமாக வைத்ததுதான் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் விநியோக உரிமையை செவன் ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது. பொங்கலுக்கு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
வெல்கம் பேக் ஃபாசில்!


Click it and Unblock the Notifications











