தமிழில் படமாகும் விர்ஜீனியா பயங்கரம்
சூடான சம்பவங்களை சுடச் சுட படமாக்கும் கோலிவுட், விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் படமாக்கவுள்ளது.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், ராஜீவ் காந்தி படுகொலை என நிஜத்தில் நடந்த பல சம்பவங்கள் தமிழில் படமாகியுள்ளன. அந்த வரிசையில் இப்போது விர்ஜீனியா படுகொலை சம்பவமும் படமாகவுள்ளது.32 பேரை தென் கொரிய மாணவர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து இனி வரும் காலம் என்ற பெயரில் இயக்கவுள்ளார் சிபி சந்தர் என்ற புதுமுக இயக்குநர்.
சிபி, கஸ்தூரி ராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இனி வரும் காலம் படத்தை இயக்கவுள்ளார்.
ரஞ்சன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார் (தென் கொரிய மாணவராக இவர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது). தமன்னாதான் நாயகியாம். இன்னொரு ஹீரோயினாக சஞ்சிதா என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார்.
ராஜாபாதர், காசிராஜ், தனுஷ் நாயக் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
மே 4ம் தேதி படத்தை ஆரம்பித்து 20 நாட்களுக்குள் எடுத்து முடிக்கவுள்ளனராம்.
படப்பிடிப்பை எங்கு நடத்தவுள்ளனர் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அமெரிக்கா போய் படமாக்க மாட்டார்கள்.
வேறு ஏதாவது நாட்டில் வேறு ஒரு பல்கலைக்கழகத்தை பின்னணியாக வைத்து எடுக்கப் போவதாய் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











