ஜில்ஜில் கோடை விருந்து
இதுவரை இல்லாத புதுக் கதையாக இந்த ஆண்டு கோடை காலத்தில் அதிக அளவிலான திரைப்படங்கள் இந்த மாதத்தில் வெளியாகின்றன. எல்லாம் சிவாஜி படத்தின் புண்ணியத்தால்.
சூரியனின் சொர்க்க பூமியில் தமிழகமும் ஒன்று. சுட்டெரிக்கும் வெயிலும், வறுத்தெடுக்கும் கோடையும் தமிழக மக்களுக்கு மரத்துப் போன ஒன்று.இந்தக் கோடை வெயிலை மறந்து குளுகுளுவென ரசித்துப் பார்க்க கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட படங்கள் இந்த மாதத்தில் மட்டும் வெளியாகின்றன. வழக்கமாக இவ்வளவு படங்கள் கோடை காலத்தில் வெளியானதில்லையாம்.
என்ன படம் வரப் போகிறது என்பது குறித்த ஒரு குட்டிப் பட்டியல் இதோ ...
கூடல் நகர், நிறம், குப்பி (மூன்றும் ரிலீஸாகி விட்டன). அடுத்து, அற்புதத் தீவு (ஏப். 11), காசு இருக்கணும் (ஏப். 12), மாயக்கண்ணாடி, உன்னாலே உன்னாலே, மதுரை வீரன், சென்னை 600028, புலன் விசாரணை-2 (ஐந்தும் ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டுக்கு வருகின்றன).
ஏப்ரல் 20ம் தேதி பரட்டை என்கிற அழகுசுந்தரம், நான் அவன் இல்லை, நீ நான் நிலா, கானல் நீர் ஆகிய படங்கள் வருகின்றன.
ஏப்ரல் 27ம் தேதி கருப்பசாமி குத்தகைதாரர், ஓரம்போ ஆகிய இரு படங்களும் திரைக்கு வருகின்றன.
தியேட்டர் பற்றாக்குறை, லேப் பிரச்சினை, நிதிப் பிரச்சினை காரணமாக இவற்றில் ஓரிரு படங்கள் தள்ளிப் போகக் கூடும்.
ஆனால் உண்மையான சம்மர் மே மாதத்தில் தமிழ் சினிமாவுக்கு ஆரம்பிக்கிறது. ரஜினியின் சிவாஜி மே 17ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு முன்பாக அஜீத்தின் கிரீடம் படமும் ரிலீஸாகவுள்ளது. இருப்பினும் கிரீடம் சற்றே தள்ளிப் போகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சிவாஜி வெளியாவதால் பல படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களைத் தள்ளிப் போட்டனர். இப்போது மே மாதத்திற்கு சிவாஜி தள்ளிப் போயுள்ளதால், தங்களது படங்களை வேகமாக வெளியிட முடிவு செய்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











