படமாகும் பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக் குரலில் ஹிட் ஆன ஆயிரம் நிலவே வா பாடல் வரியை டைட்டிலாகக் கொண்டு புதுப் படம் ஒன்று உருவாகிறது.
ஆயிரம் நிலவே வா படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது ஹரி பாஸ்கர் என்ற புதுமுகம். இசைஞானி இளையாராஜாவின் குடும்பத்திலிருந்து இந்த புது நாயகன் புறப்பட்டு வந்துள்ளார்.இந்த நிமிடத்தில் கோலிவிட்டில் இசைஞானியின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இசையமைப்பாளர்களாக உள்ளனர். இவர்களில் ராஜா, கங்கை அமரன் ஆகியோருக்கு அடுத்து, அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களாக கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி (அமரனின் மகன்) ஆகியோர் கலக்கி வருகின்றனர். இவர்களில் யுவன் பிய்த்து வாங்கி வருகிறார்.
இந்த வரிசையில் புதிதாக வந்துள்ள ஹரி பாஸ்கர், மறைந்த ஆர்.டி.பாஸ்கரின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த மகன் பார்த்தி பாஸ்கர் ஏற்கனவே பாடலாசிரியராக, இயக்குநராக அறிமுகம் ஆனார். பார்த்தி பாஸ்கரின் இயக்கத்தில் வெளியான பம்பரக் கண்ணாலே ஹிட் படமாகி அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
இப்போது ஹரி பாஸ்கர், ஆயிரம் நிலவே வா மூலம் நாயகனாகிறார். பார்த்தி பாஸ்கர்தான் படத்தை இயக்குகிறார். ஹரி பாஸ்கருக்கு ஜோடியாக கேரளத்து வண்ணக்கிளி அம்ரிதா திறமை காட்ட வருகிறார்.
புதுமுகமாக இருந்தாலும் அம்ரிதா, ரசிக்கும் படி ரகளையாகவே இருக்கிறார். ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற கலைஞர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள்.
சந்திரமுகி புகழ் சேகர் ஜோசப் கேமராவைக் கையாளுகிறார். பார்த்தி பாஸ்கரின் மச்சான் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஸ்ரீ சினி மேக்கர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கவுள்ள வரதராஜுலு படத்தை பிரமாண்டமாக கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











