சமரசமாகும் காவேரி, வைத்தி

நடிகை காவேரி சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த ஒளிப்பதிவாளர் வைத்தி, தன்னை விட்டு விட்டு தனது மாமன் மகளை மணக்கப் போவதாகவும், அதை தடுத்து நிறுத்தி தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னை போலீஸார், வைத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். வைத்தி தலைமறைவானார். தான் கைது செய்யப்படலாம் என்தால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வைத்தி.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைத்தியைக் கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று நீதிபதி ரகுபதி முன்பு வைத்தியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைத்தி மற்றும் காவேரியின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகினர். காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காவேரியின் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாக தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, காவேரி மற்றும் வைத்தியின் வக்கீல்கள் இருவரும் சமரசமாகப் போக சம்மதிப்பதாக தெரிவித்தனர்.
இவை அனைத்தையும் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, இருவரும் வருகிற 30ம் தேதி சமரச தீர்வு மையத்தை அணுக வேண்டும். அங்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











