கருப்பர்-வெள்ளையர் பிளவை உருவாக்குகிறார் ஜெயராம்- வீட்டு வேலைத் தொழிலாளர்கள் கண்டனம்

தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஷா நிவாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
மாநாட்டினை போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தொடங்கி வைத்தார். மாநாட்டில், சமூக நலத்துறை ஆணையாளர் எம்.பி.நிர்மலா, சமூக ஆர்வலர் பாரதி பிர்லா, ஐ.எல்.ஓ. இந்திய பிரதிநிதி ஜோஸ்வா மார் இக்னேசியஸ், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை தொழிலாளர் துறை தலைவர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ், சகோதரி ரெய்ச்சல் ஓமன் உள்பட 23 மாநில நிர்வாகிகளும், வீட்டு வேலை தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
வீட்டு வேலைக்கார பெண்ணைப் பற்றி இழிவாக பேசிய நடிகர் ஜெயராம் பற்றி மாநாட்டின் இடையே விவாதிக்கப்பட்டது. நடிகர் ஜெயராம் பேசிய வார்த்தைகள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டதும், மாநாட்டில் கலந்துகொண்ட வீட்டு வேலை பெண் தொழிலாளர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் ஜெயராமை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து, தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கத்தின் ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர் லிசி கூறுகையில்,நடிகர் ஜெயராமின் பேச்சு வீட்டு வேலைத் தொழிலாளர்களையும், அவர்கள் செய்யும் வேலையையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
அவருக்கு படிப்பறிவு இருந்தாலும், மனிதாபிமான அறிவு இல்லை. அவரின் பேச்சு மூலம் கறுப்பர் - வெள்ளையர் என்ற இனவெறியை தூண்டப் பார்க்கிறார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.


Click it and Unblock the Notifications











