இவர்தான் சிவாஜி என்றால் வெளிநாட்டவர் நம்புவார்களா... ஒய்.ஜி.மகேந்திரன் சுவாரசிய தகவல்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் அக்டோபர் ஒன்றாம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது.
நடிப்பை பொறுத்தவரை இலக்கணம் படைத்தவர் என்ற பெயரோடு மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
இந்நிலையில் அவருடைய தீவிர ரசிகரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவரைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

பார் மகளே பார்
பெற்றால் தான் பிள்ளையா என்கிற மேடை நாடகத்தில் கதாநாயகனுக்கு ஒரு மகனாக நடித்திருப்பார் மகேந்திரன். அந்த நாடகத்தை பார்த்த சிவாஜி கணேசன் அதனை பார் மகளே பார் என்று திரைப்படமாக எடுத்தார். படத்தில் இரண்டு மகன்கள் கதாபாத்திரங்களுக்கு பதிலாக இரண்டு மகள்கள் என்று மாற்றி வைத்திருப்பார்கள். முதலில் ஒய்.ஜி.மகேந்திரன்தான் மகன் கதாபாத்திரமாக நடிக்க வேண்டி இருந்ததாம். ஆனால் கதாபாத்திரம் மகளாக மாறியதால் ஒய்.ஜி.மகேந்திரன் அதில் நடிக்க முடியாமல் போனது.

35 படங்கள்
அந்தப் படத்தை தவற விட்டிருந்தாலும், அதன் பிறகு 35 படங்கள் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன். அந்த 35 படங்களில் ஒவ்வொரு நாள் நடிக்கும் பொழுதும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று நடிப்பு பயில்வது போல் தனக்கு அனுபவம் கிடைத்ததாக மகேந்திரன் கூறியிருக்கிறார். பரிட்சைக்கு நேரமாச்சு என்கிற திரைப்படத்தில் கிட்டத்தட்ட சிவாஜி கணேசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்மகேந்திரன்.

வெத்தல பொட்டி வீரப்பன்
சிவாஜி கணேசன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்த ஒய்.ஜி.மகேந்திரன் அப்போது தான் நடித்துக் கொண்டிருந்த வெத்தலை பொட்டி வீரப்பன் என்கிற நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். மகேந்திரனை எப்போது பார்த்தாலும்,"டேய் பரதேசி என்று உரிமையோடு அதட்டிக் கூப்பிடுவாராம் சிவாஜி. அந்த சந்திப்பின் போது,"உனக்கு சிவாஜி கணேசன விட்டா வேற நடிகனே கிடையாதா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு,"ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தால் அதற்கு சிறப்பு விருந்தினராக சிவாஜிதான் வரவேண்டும் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்" என்று மகேந்திரன் சொல்ல, அடி செருப்பால என்று மீண்டும் செல்லமாக திட்டிவிட்டு, சரி நா வரேன் என்று கூறினாராம். ஆனால் ஒரு வாரம் கழித்து அவர் இறந்து போகவே அந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே போய்விட்டது என ஒய்.ஜி.மகேந்திரன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

கட்டபொம்மன் கலாட்டா கல்யாணம்
அவருடைய ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசத்தை காட்டக் கூடியவர் சிவாஜி கணேசன். கட்டபொம்மன் படத்தில் நடித்தவர்தான் கலாட்டா கல்யாணத்தில் நடித்தவர் என்று கூறினால் யாரேனும் நம்புவார்களா? ஒரு முறை தெய்வமகன் திரைப்படம் வெளியானபோது அந்த ஆண்டு அவர் நடித்த படங்களை பட்டியலிட்டு போட்டு காண்பித்தாராம் மகேந்திரன். அதைப் பார்த்த வெளிநாட்டவர்கள் அதில் நடித்தது ஒரே நடிகரா என்று நம்பாமல் ஆச்சரியமாக கேட்டதாக ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











