அஜீத்தை இயக்குவது நான் மட்டுமே - ராஜு சுந்தரம்

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் அஜீத்தின் அடுத்த படத்தை பிரபு தேவாவும், ராஜூ சுந்தரமும் இணைந்து இயக்கப் போவதாக செய்தி வெளியாகி இருந்தது.
படத்தின் நாயகன் அஜீத்தே இப்படி பேட்டி அளித்திருப்பதாக அஜீத் விசிறிகளின் இணைய தளம் ஒன்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அஜீத்துக்கு புதிய ஜோடி தேடுவதில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ராஜூ சுந்தரத்தை நாம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அதற்கு ராஜு சுந்தரம் பதிலளிக்கையில், அஜீத் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதை முடிவாகிவிட்டது. இப்போது தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்து கொண்டிருக்கிறோம். கதாநாயகி தேர்வு இன்னும் சில தினங்களில் முடிவாகிவிடும்.
இந்தப் படத்தை நான் மட்டும்தான் இயக்குகிறேன். ஆனால் இயக்குனர் என்ற முறையில் பிரபு தேவா என்னைவிட சீனியர். அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே...
இந்தப் படத்துக்கு அக்பர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்றார்.
அஜீத்தின் இந்தப் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக ஒப்பந்தப் செய்யப்பட்டுள்ளார் என்பது ராஜூ சொன்ன கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











