விஜயகாந்தை அடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை... எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
சென்னை: 80 வயதுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் எப்போதுமே இயக்குநராகவும் நடிகராகவும் சங்கம் சார்ந்த பணிகளிலும் தன்னை பரபரப்பாகவே வைத்துக் கொள்பவர்.
தனக்கும் தனது மகன் விஜய்க்கும் அதிகமான கோபமும் பிடிவாதமும் வரும். அதனால்தான் இப்போது அவரை இயக்குவதில்லை என்று கூறுவார்.
அப்படிப்பட்ட கோபக்காரர் படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை அடிப்பார் என்ற குற்றச்சாட்டிற்கு சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

பொறுப்பு
பொதுவாக இயக்குநர்கள் தங்களிடம் பணி புரியும் துணை இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரையும் திட்டுவது வழக்கம். அதற்கு காரணம் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் இயக்குநரை நம்பித்தான் தயாரிப்பாளர் லட்சக்கணக்கில் செலவிடுவார்கள். செலவு சற்று அதிகமானால் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இயக்குநர்கள் இருப்பதால் அந்த மன நிலையை பிறர் மீது காட்டுவார்கள். குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா தன் படத்தில் நடிக்கும் நடிகர்களை அடித்து விடுவார் என்று கூறுவார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் கோபம்
அந்த வகையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் தன்னிடம் பணிபுரியும் துணை இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை அடிப்பார் என்று பலர் கூறுகின்றனர். ஜெண்டில்மேன், பாட்ஷா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சரண்ராஜை தமிழில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது அவரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த சங்கர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அடி வாங்குவார் என்று சரண்ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ராதிகா பேச்சு
இதே போல எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருந்த நையப்புடை என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகாவும் அவரை வைத்துக்கொண்டே அவர் திட்டுவது பற்றியும் அடிப்பது பற்றியும் கூறியிருக்கிறார். மேலும் அவருடைய படப்பிடிப்பு தளத்தில் அவரிடம் திட்டு வாங்காத ஒரே நடிகை நான்தான் என்றும் அதற்கு காரணம் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு சென்று நடித்துக் கொடுத்துவிடுவேன். மற்றபடி விஜயகாந்த் உள்பட அனைவரையுமே எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டுவார் அடிப்பார் என்று ராதிகா அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.

சந்திரசேகர் விளக்கம்
விஜயகாந்த்தை நீங்கள் அடித்துள்ளீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு ஆசிரியர் என்பவர் வணக்கத்திற்கு உரியவர். நான் துணை இயக்குநராக இருந்த காலகட்டத்தில் என்னுடைய இயக்குநரின் ஆடைகளை துவைத்திருக்கிறேன். ஒரு ஆசிரியர் எப்படி தன்னுடைய மாணவர்கள் நன்றாக வர வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பாரோ அப்படித்தான் ஒவ்வொரு இயக்குநரும் இருப்பார். நானும் என்னிடம் பணிபுரிபவர்களை கண்டித்திருக்கிறேன். விஜயகாந்த்தை கூட திட்டியிருக்கிறேன், ஆனால் அடித்தது போல் ஞாபகம் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











