ஊரே கைகொட்டி சிரித்தபோது ஒரு பெண் செய்த விஷயத்தை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்... தனுஷ் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தி கிரே மேன் திரைப்படம் அவருக்கு பெருமையை சேர்க்கும் வகையில் அமைந்தது.
அடுத்ததாக திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது. அதில் தான் சந்தித்த அவமானங்கள் பற்றியும் தனக்கு கிடைத்த ரசியை பற்றியும் கூறியுள்ளார்.

தி கிரே மேன்
தனுஷின் கேரியரை பொருத்தவரை ஒரு நல்ல படம் கொடுத்தால் அடுத்து ஒரு சில படங்கள் சுமாராக இருக்கும். ஆனால் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுத்து பெயர் வாங்கிடுவார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நல்ல பெயர் எடுத்தவர் அதன் பின்னர் வெளியான ஆத்திராங்கீ ரே மற்றும் மாறன் திரைப்படங்களில் விமர்சனங்களை சந்தித்தார். தற்சமயம் ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். படத்தில் 15 நிமிடங்களே வந்தாலும் மற்ற நடிகர்களால் தொட முடியாத உயரத்தை தொட்ட பெருமை தனுஷுக்கு கிடைத்துள்ளது.

அடுத்தடுத்த திரைப்படங்கள்
அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவன் திரைப்படத்திலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்திலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நான்காவது முறையும் செல்வராகவன் இயக்கத்தில் ஐந்தாவது முறையும் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் எடுக்கப்படுவதால் இதுவே தனுஷின் முதல் பை-லிங்குவல் திரைப்படமாகும்.

அவமானம்
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷை நடிக்கச் சொன்ன போது அவர் தயங்கினாராம். காரணம் தனது தோற்றத்தை பலரும் கேலி செய்வார்கள் என்று. ஆனால் கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவனின் பேச்சைக் கேட்டு அதில் கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்கும் போது அங்குள்ளவர்கள் யார் கதாநாயகன் என்று இவரிடமே கேட்பார்கள் என்றும் அப்போது தனக்கு அடுத்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை காட்டி அவர் தான் ஹீரோ என்று சொல்வேன் என்றும் தனுஷ் முன்னதாக கூறியுள்ளார். படம் வெளிவந்த போதும் பத்திரிகையாளர்களும் மக்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

மறக்க முடியாத ரசிகை
அதேபோல காதல் கொண்டேன் திரைப்படத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு தாடி வைத்துக்கொண்டு ஒரு ஊரில் நடித்துக் கொண்டிருந்தபோது பொதுமக்களில் ஒருவர் யூனிட்டில் இருப்பவரிடம் யார் கதாநாயகன் என்று கேட்க, தனுஷை கைகாட்டியுள்ளார். அதற்கு அந்த நபர் சத்தமாக சிரித்து இவர்தான் ஹீரோவா அப்பொழுது நானும் ஹீரோதான், அங்கு நிற்கும் ஆட்டோக்காரனும் ஹீரோதான், அனைவரும் ஹீரோதான் என்று சத்தமாக சொல்ல அதை கேட்ட அங்கிருந்த மக்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். தனுஷ் அவமானம் தாங்காமல் நிற்கும் பொழுது கூட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் மட்டும் தன்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டதாகவும் ஏன் என்னிடம் கேட்கிறாய் என்று தான் கேட்டபோது உங்களது துள்ளுவதோ இளமை பார்த்தேன் எனக்கு பிடித்த படம் அதனால் தான் கேட்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதாகவும், அந்தப் பெண்தான் தன் வாழ்நாளில் என்றைக்குமே தன்னுடைய ஃபேவரைட் ரசிகை என்றும் தனுஷ் நெகிழ்ந்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











