நான் ஹீரோவானால் இவர்தான் என்னை இயக்க வேண்டும்... இயக்குநர் ஷங்கர் சொன்ன நபர் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் ஷங்கர் தற்சமயம் நடிகர் ராம் சரணின் 15-வது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இது அவருடைய முதல் நேரடி தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தவிர்த்து, ஏற்கனவே அவர் இயக்க ஆரம்பித்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் துவங்கப்படலாம் என்ற பேச்சு வார்த்தை, விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக உதயநிதி அறிவித்திருந்தார்.
மேலும், 2005-ஆம் அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்நியன் படத்தின் இந்தி டப்பிங் பதிப்பே வட இந்தியாவில் மிகப் பெரிய ஹிட் ஆனது.

பிடித்த இயக்குநர்களும் படங்களும்
முன்னதாக ஷங்கர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், தனக்கு இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா ஆகிய நான்கு பேரையும் மிகவும் பிடிக்கும். ஏக் துஜே கே லியேவின் ஒரிஜினல் பதிப்பான கமல் நடித்த தெலுங்கு படம் மரோசரித்திரா தனக்கு பிடித்த பாலச்சந்தர் படம் என்றும், பாரதிராஜா இயக்கிய நிறைய படங்கள் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 16 வயதினிலே மற்றும் முதல் மரியாதை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் உதிரிப் பூக்கள். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை ஆகிய படங்கள் தன்னுடைய ஃபேவரைட் என்று கூறியுள்ளார். மூன்றாம் பிறை படத்தை ஒரே வாரத்தில் மூன்று முறை திரையரங்கில் பார்த்திருக்கிறாராம்.

நடிகரானால்…
ஒரு வேளை நீங்கள் நடிகரானால், யார் உங்களை இயக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே மேடை நாடகங்களில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவருடைய குருநாதர் SA சந்திரசேகர் இயக்கிய படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருப்பார்.

குயில் அல்ல கிங் காங்
முதலில் அழகிய குயிலே என்கிற கிராமத்து கதையைத்தான் படமாக்க நினைத்தாராம் ஷங்கர். ஆனால் ஜென்டில்மேன் கொடுத்த வெற்றி அவரது பாதையை மாற்றி அமைத்தது. இப்போது மக்கள் தன்னிடம் கிங் காங் போன்ற படங்கள்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு குயிலே படத்தை கொடுத்தால் சிறியதாக தோன்றும். ஒரு வேளை எடுத்தால், அதில் விக்ரம்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திரு. டன் 2 தலைவன்
தன்னுடைய படங்களுக்கு இரண்டாவது ஆப்ஷனாக வைத்திருந்த தலைப்புகளையும் ஷங்கர் கூறியுள்ளார். ஜென்டில்மேனுக்கு திரு. டன், ஜீன்ஸிற்கு Two, முதல்வனுக்கு தலைவன் மற்றும் பாய்ஸிற்கு ஃப்ரெண்ட்ஸ் என்று ஷங்கர் பல சுவாரஸ்யமான தகவல்களை அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











