நாங்கள் இளையராஜாவிற்கு செய்ததை மறக்காமல் திருப்பி செய்தார்... பி.வாசு ஃபிளாஷ் பேக்
சென்னை: இயக்குநர் பி.வாசு தற்சமயம் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.
நடிகர் லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் இளையராஜா தனக்கும் இயக்குநர் சந்தான பாரதிக்கும் செய்த உதவி பற்றி பி.வாசு நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆப்தமித்ரா ஆப்தரக்ஷகா
மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ என்ற படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்று ரீமேக் செய்திருந்தார் பி.வாசு. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து ரஜினி அதனை தமிழில் ரீமேக் செய்ய நினைத்து அதன் பிறகு உருவானதுதான் சந்திரமுகி திரைப்படம். பின்னர் ஆப்தமித்ரா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஆப்தரக்க்ஷகா திரைப்படத்தை கன்னடத்தில் எடுத்து அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

சந்திரமுகி 2
இதற்கிடையில் ரஜினி மற்றும் பி.வாசு கூட்டணியில் வெளிவந்த குசேலன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஆப்தரக்ஷகா திரைப்படத்தை சந்திரமுகி இரண்டாம் பாகமாக தமிழில் அவர்கள் எடுக்கவில்லை. இன்னொரு பக்கம் பரமசிவன் திரைப்படத்தில் பணிபுரிந்த வாசு மற்றும் அஜித் கூட்டணி சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பணிபுரிவார்கள் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்தப் படத்தைப் பற்றிய எந்தத் தகவலும் அதன் பிறகு வரவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு லாரன்ஸை வைத்து சந்திரமுகி பார்ட் 2-வை அறிவித்துள்ளார் வாசு.

பாரதி வாசு
விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சந்தான பாரதி அவர்கள் அடிப்படையில் ஒரு இயக்குநர். வாசு மற்றும் சந்தான பாரதி ஆகிய இருவரும் இயக்குநர் ஸ்ரீதரிடம் துணை இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானார்கள். அந்தப் படம் உருவாவதற்கு பன்முக கலைஞரான கங்கை அமரன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமானார். அப்போதுதான் மீண்டும் கோகிலா படத்திற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி இருந்தாராம் இளையராஜா.

இளையராஜா பெருந்தன்மை
பன்னீர் புஷ்பங்கள் பட்ஜெட் 5 லட்சம் இருக்கும் போது ராஜா அண்ணன் எவ்வளவு கேட்கப் போகிறார் என்ற பயத்தில் இருந்தார்களாம் வாசு மற்றும் பாரதி. பாடல்களின் ரெக்கார்டிங் முடிந்துவிட்டது, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, பின்னணி இசை சேர்ப்பும் முடிந்துவிட்டது. ஆனால் அதுவரை தனது சம்பளம் எவ்வளவு என்று இளையராஜா சொல்லாமல் இருந்தாராம். கங்கை அமரன் இளையராஜாவிடம்,"திடீரென்று அதிக சம்பளம் கேட்டு குண்டை தூக்கி போட்டு விடாதண்ணா" என்று சொல்ல,"எனக்கு நீங்கள் சம்பளம் கொடுக்க வேண்டாம்" என்று இரண்டு இயக்குநர்களிடமும் கூறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் இளையராஜா. அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீதர் முதன் முதலில் இளையராஜாவிடம் பணி புரிந்தபோது அவருக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியது வாசு மற்றும் பாரதிதானாம். அதன் காரணமாகத்தான் அவர்கள் இயக்குநர்களாக அறிமுகமான படத்திற்கு இலவசமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் இளையராஜா.


Click it and Unblock the Notifications











