இளையராஜாவின் எஸ்.எம்.எஸ்
எஸ்.எம்.எஸ். என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகிறது. இசைஞானி இளையராஜாதான் இப்படத்துக்கு இசை மாலை கோர்க்கிறார்.
மாடம்மா என்ற படத்தை இயக்கியவர் சுர்ஜுலன். இவரது கைவண்ணத்தில்தான் இந்த எஸ்.எம்.எஸ். உருவாகிறது. வித்தியாசமான திரில்லர் கதையாம் இது.இப்படத்தின் கதையை இசைஞானியிடம் சொல்லியபோது, கதையைக் கேட்டு முடித்தவுடன் எஸ்.எம்.எஸ். என்று படத்துக்குப் பெயர் வைக்குமாறு கூறினாராம் ராஜா.
பாலாவும், நவ்யா நாயரும் படத்தில் ஜோடி போடுகிறார்கள். இருவரும் இணைவது இது இரண்டாவது முறையாம். முன்பு கலாபன் என்ற படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருந்தாலும் இவர்களின் நடிப்பு மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஜோடி சேர்த்துள்ளாராம் இயக்குநர்.
சரிதாவின் கணவர் (இப்போது டைவர்ஸ் கேட்டு வழக்குப் போட்டுள்ளார்) முகேஷ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.
படத்தோட கதை என்ன சேட்டா என்று கேட்டபோது, அதாவது காமெடியும், சஸ்பென்ஸும் இணைந்த கதை இது. இரண்டையும் சரிவிகித சமானத்தில் கலந்து கொடுத்துள்ளேன் என்றார். இப்படம் ரசிக்ரகளுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் போனஸாக கூறினார்.
இப்படத்தில் இளையராஜாவின் இசைதான் முக்கிய பலமாம். அருமையான பின்னணி இசையமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ள ராஜா, படத்துக்காக 5 பாடல்களை முடித்துக் கையில் கொடுத்து விட்டாராம்.
ராஜாவைப் பற்றிய ஒரு கொசுரு: தமிழை விட இப்போது மலையாளத்தில்தான் ராஜாவின் ராகம் படு வேகமாக இருக்கிறதாம். மலையாளத்தில் 4 படங்களில் ராஜா தற்போது படு பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறாராம்.
தமிழையும் தாலாட்டுங்க என்று யாராவது ராஜாவிடம் தாஜா செய்யுங்களேன் அய்யா!


Click it and Unblock the Notifications