கமலுடன் மோதும் விக்ரம்

உலக நடிகர்களிலேயே முதல் முறையாக 10 வேடங்களில் கமல்ஹாசன் அசத்தும் தசாவதாரம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்குப் பிந்தைய நகாசு வேலைகளில் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படப்பிடிப்பின்போதே, ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்தித்து அவர் போட்டுள்ள கெட்டப்கள் குறித்து பார்த்து, கேட்டு அசந்து போய் கமலை பாராட்டியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் கமல்ஹாசனின் கெட்டப்களை கேட்டறிந்து கமலை பாராட்டியுள்ளார். விஜய்யும் கூட கமல்ஹாசைனை நேரில் சந்தித்து கெட்டப் குறித்து கேட்டு அதிசயித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரத்துடன் விக்ரமின் பீமா மோத வருகிறது.
பீமா ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கி தொக்கி நிற்கும் படம். லிங்குச்சாமி இயக்க, ஏ.எம். ரத்னம் தயாரிக்க உருவாகியுள்ள பீமா, கடந்த ஆண்டு மே மாதம் தயாரிப்புக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக படம் தட்டுத் தடுமாறி வளர்ந்து வந்தது. படம் வருமா, வராதா என்ற கேள்விக்குறியும் ஒரு கட்டத்தில் எழுந்தது.
இதனால் விரக்தியாகிப் போன விக்ரம், பீமாவை கிட்டத்தட்ட மறந்து விட்டு கந்தசாமிக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில், பீமா ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். பொங்கல் பண்டிகையின்போது படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.
இதன் மூலம் கமலுடன் முதல் முறையாக மோத களத்தில் குதிக்கிறார் விக்ரம். பொங்கல் பண்டிகைக்கு வேறு யாருடைய படமும் வரவில்லை. இதனால் தசாவதாரமும், பீமாவும்தான் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் பெரிய படங்கள்.
லிங்குச்சாமி, தனது பணிகளை முழுமையாக முடித்து விட்டார். படத்தின் முதல் பிரதியை திரையுலகப் பிரமுகர்களும் பார்த்துள்ளனர். அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாகவும், சிறப்பாக வந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.
இதையடுத்து படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும், ஏ.எம்.ரத்னத்திற்கு உதவிக் கரம் நீட்டவும் பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் முன்வந்துள்ளனர். இதனால் ரத்னம் தெம்பாகியுள்ளார்.
இதே தெம்போடு அடுத்து விஜய்யை வைத்து, செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறாராம் ரத்னம்.


Click it and Unblock the Notifications











