ஜெனீலியா சுப்ரமணி
சந்தோஷ சுப்ரமணி படத்துக்கான பூஜை அழைப்பிதழை படு வித்தியாசமாக அடித்து அசத்தியுள்ளார் ஜெயம் ராஜா.
தமிழ் சினிமாக்காரர்கள் சிலர் வித்தியாசமாக செயல்படுவதில் வித்தகர்கள். புதுமைப் பித்தன் பார்த்திபன் அந்த வகையில் படு வித்தியாசமானவர், சில சமயங்களில் அவர் செய்வது படு வினோதமாகவும், வில்லங்கமாகவும் கூட தோன்றும்.குடைக்குள் மழை பட பத்திரிக்கையாளர் காட்சிக்கான அழைப்பிதழை சிறு குடை வடிவில் வடிவமைத்து கலங்கடித்தவர் பார்த்திபன். இப்போது அந்த பாணிக்கு மாறியுள்ளார் ஜெயம் ராஜா.
ஜெயம் ரவியின் அண்ணனான ராஜா, ரீமேக் மன்னன் என்று பெயர் பெற்றவர். இவர் தமிழில் இதுவரை இயக்கியுள்ள அத்தனை படங்களுமே ரீமேக் ஐட்டங்கள்தான். தற்போது புதிதாக தெலுங்கில் வெற்றிக் கொடி நாட்டிய பொம்மரிலு படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார். சந்தோஷ சுப்ரமணி என்று படத்துக்குப் பெயரும் சூட்டியுள்ளார்.
ஜெயம் ரவிதான் நாயகன். ஜூலை 16ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. டி சினிமா அலுவலகத்தில்தான் பூஜை. இதற்கான அழைப்பிதழை நூதனமாக வடிவமைத்துள்ளார் ராஜா.
ராஜாவும், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் இணைந்து அனுப்பியுள்ள பூஜை அழைப்பிதழைத் திறந்தவுடன் கெளசல்யா சுப்ரஜா .. என்று சுப்ரபாதம் இசைக்கிறது. அதற்கு நடுவே ஜெயம் ரவி, பட பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
மங்களரகமான இந்த அழைப்பிதழ் பெற்றவர்கள் அசந்து போய் ஆஹாஹா என்று பாராட்டுகிறார்களாம்.
ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர் ஜெனீலியா. தமிழில் ராசியில்லாத ராணியாக பெயரெடுத்து விட்ட ஜெனீலியாவை மீண்டும் தமிழில் முன்னேற்றி விடும் முயற்சியாக சந்தோஷ சுப்ரமணி படத்தில் நாயகியாக்கியுள்ளார் ராஜா.
ஜெனீலியா இதற்கு முன்பு நடித்த பாய்ஸ், சச்சின், சென்னை காதல் ஆகிய மூன்று படங்களுமே தோல்விப் படங்கள். இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார் ஜெனீலியா. இந்த நிலையில் பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுப்ரமணியில் நடிக்கவுள்ளார் ஜெனீலியா.
இவர்களைத் தவிர பிரகாஷ் ராஜ், கீதா, மனோபாலா, லொள்ளு சபா சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். தீபாவளிக்கு சுப்ரமணியை தியேட்டரில் காணலாமாம்.
ரொம்ப சந்தோஷம்


Click it and Unblock the Notifications











