வருகிறது 'கலக்கப் போவது யாரு- 4'

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மூலம் ஏகப்பட்ட திறமையாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தனர். முதல் பாகத்திலேயே அனைத்து டிவி ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்த விஜய் டிவி அடுத்தடுத்து 3 பாகங்களை அரங்கேற்றி தற்போது 4வது பாகத்திற்கு வந்துள்ளது.
வோடபோன் கலக்கப் போவது யாரு 4 - கலக்கல் ஆரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை முதல் ரசிகர்களை கலகலக்க வைக்க வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிஷன் நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல்வறு வயதைக் கொண்டவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவர்களிலிருந்து 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்ச்சி 25ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகும்.
இதில் காமெடி கிங் பட்டம் வெல்வோருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும். அத்தோடு மட்டுமல்லாமல், வெற்றி பெறுவோருக்கு விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பும் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மிமிக்ரி, ஸ்டாண்ட் அப், வெரைட்டி என விதம் விதமான பிரிவுகளில் போட்டியாளர்கள் கலக்க வாய்ப்பளிக்கப்படும்.
கலக்கப் போவது யாரு 4ம் பாகத்தின் நடுவர்களாக உமா ரியாஸும், நடிகர் பாண்டியராஜனும் கலந்து கொள்ளவுள்ளனர். 3வது பாகத்தை வெற்றிகரமாக கலாய்த்து வழங்கிய, அதாவது தொகுத்து வழங்கிய ரம்யாவும், சேதுவும் 4வது பாகத்தையும் தொகுத்து வழங்கவுள்ளனர்.
கலக்க விஜய் டிவி ரெடி, வலிக்க உங்க வயிறு ரெடியா?


Click it and Unblock the Notifications











