கமல், ரஜினி என்ன, ஆண்டவனே வந்தாலும் அப்படித்தான் இருக்கணும்... நாசருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விளங்குபவர் நாசர். குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை, கதாநாயகன் என்று எதைக் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.
அவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை பரபரப்பாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளிலேயே நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியுடன் நடித்தது பற்றி சுவாரசியமாக பேசியிருக்கிறார் நாசர்.

அப்பாவின் விருப்பம்
சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நடிகர் நாசர் ஏர் ஃபோர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் நடிகராக வேண்டும் என்பது அவருடைய தந்தையின் விருப்பமாம். எனவே நாடகக் குழுவில் அவரை சேர்த்துவிட்டாராம். பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடும் பொழுது ஒரு ஹோட்டலிலும் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். எதற்காக தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தன் தந்தை ஆசைப்பட்டார் என்று இதுவரை தனக்கு தெரியவில்லை என்று நாசர் கூறியுள்ளார்.

பன்முகங்கள்
நடிப்பை தாண்டி படங்கள் தயாரிப்பது, இயக்குவது என்று பன்முகங்களை கொண்டவர். நடிகர் சங்கத் தேர்தலில் இவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றபோது நாசர் அதில் முக்கிய பங்காற்றினார். அந்தப் பிரச்சினைகளை எல்லாம் பார்க்கும் பொழுது, தான் ஏர் ஃபோர்ஸ் அல்லது ஹோட்டலிலேயே வேலை பார்த்து இருக்கலாம் எதற்காக நடிக்க வந்தோம் என்று சில பொழுது யோசிப்பாராம்.

கமல் திரைப்படங்கள்
நாசருடைய திறமையை பெரிதும் பயன்படுத்தியவர் நடிகர் கமல் ஹாசன். திறமைசாலிகளுக்கு எப்போதுமே தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்கக் கூடிய கமல் நாயகன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நாசரை அதன் பின்னர் அவ்வை சண்முகி, தேவர் மகன், மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வைத்துள்ளார். அது மட்டுமின்றி தான் தயாரித்த மகளிர் மட்டும் திரைப்படத்தில் அவரை கதாநாயகனாகவும் நடிக்க வைத்திருப்பார்.

ஆண்டவனாக இருந்தாலும்
இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளிலேயே கமல் மற்றும் ரஜினியுடன் நடித்து விட்டீர்கள். அப்போது பயந்தீர்களா என்றதுபோல் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நான் நாடகக் குழுவில் இருந்தபோது எனக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம், என்னுடன் ஒரு காட்சியில் நடிப்பது ஆண்டவனாகவே இருந்தாலும் அந்தக் காட்சியை பொறுத்தவரை அவரும் ஒரு நடிகர்தான். அதனால் கடவுளாகவே இருந்தாலும் ஒரு நடிகன் பயப்படக்கூடாது என்பதுதான் தனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட முதல் பாடம் என்றும் அதனால் அவர்களுடன் நடிப்பது எளிதாகத்தான் இருந்தது என்றும் நாசர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











