கங்கனாவுக்கு கொலை மிரட்டல்!
தாம் தூம் பட நாயகி கங்கனா ரணவத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலை பேசி அழைப்புகள் வந்ததால் அவர் இதுகுறித்து மும்பை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியில் வெளியான கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையானவர் கங்கனா ரணவத். அவரது கிளாமரைப் பார்த்து அரண்டு போன மும்பை தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் புக் பண்ண போட்டியிட்டனர்.தற்போது ஐந்து இந்திப் படங்களில் நடித்து வருகிறார் கங்கனா. இதுதவிர தமிழில் தாம் தூம் படத்திலும் கங்கனாதான் நாயகி. தெலுங்கிலும் சில படங்களில் புக் ஆகியுள்ளார் கங்கனா.
இந்த நிலையில் தற்போது மும்பையில் ஒரு இந்திப் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் கங்கனா. 2 நாட்களுக்கு முன்பு அவர் ஷூட்டிங்கில் இருந்தபோது, அவரது மொபைலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண், விரைவில் நீ கொல்லப்படுவாய் என்று கூறியுள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து கங்கனாவின் மேலாளர் ஜெய்யின் மொபைலுக்கு அதே எண்ணிலிருந்து போன் வந்தது. அதில் பேசிய அதே ஆண், நீ கொல்லப்படுவாய் என்று கூறியுள்ளார்.
இந்தத் தொலைபேசி மிரட்டலுக்குப் பிறகு அதே ஆண், கங்கனாவுக்கு ஒரு மணி நேரத்தில் 188 முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த கொலை மிரட்டல் குறித்து கங்கனா கூறுகையில், எனது குடும்பத்துக்கு இப்படி அடிக்கடி விரும்பத்தகாத நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. ஏன் என்றே தெரியவில்லை.
எனது சகோதரி மீது முன்பு ஒருமுறை அடையாளம் தெரியாத ஒரு நபர் முகத்தில் ஆசிட் வீசினார். இப்போது எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று கூறியுள்ளார் கங்கனா.
இந்த கொலை மிரட்டல் குறித்து மும்பை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் கங்கனா. கங்கனாவின் மேலாளர் ஜெய்யும் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கங்கனாவைக் கொல்லப் போவதாக கங்கணம் கட்டி மிரட்டியவர் யாரோ?
தாம் தூம் படத்தின் சூட்டிங்குக்காக ரஷ்யா சென்றிருந்தபோது தான் அதன் இயக்குனர் ஜீவா மாரடைப்பால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











