கண்ணாமூச்சி ஏனடா - ரிலீஸுக்கு ரெடி!
மணிரத்தினம் மற்றும் சுஹாசினியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ப்ரியாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணாமூச்சி ஏனடா படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.
| Click here for more images |
ப்ரியாவுக்கு முதல் படம் கண்ட நாள் முதல். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நல்ல படங்களை இயக்க ஆர்வமாக இருந்தார் ப்ரியா.
இந்த நிலையில்தான் ராதிகாவின் ரேடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கண்ணாமூச்சி ஏனடா பட வாய்ப்பு ப்ரியாவுக்கு வந்தது.
சத்யராஜ், ராதிகா, ஸ்ரீபிரியா, பிருத்விராஜ், சந்தியா ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
மணிரத்தினத்தின் அலைபாயுதே மற்றும் ஆய்த எழுத்து ஆகிய இரு படங்களில் அவரிடம் உதவியாளராக இருந்தவர் ப்ரியா. அந்த அனுபவத்தைக் கொண்டு கண்ணாமூச்சி ஏனடா படத்தை நேர்த்தியாக செதுக்கியுள்ளாராம்.
இப்படத்தில் பிருத்விராஜ், சந்தியாவின் காதல் கை கூட சத்யராஜ் - ராதிகா ஜோடி பல வழிகளிலும் உதவுகிறதாம். இப்படிப்பட்ட நல்ல படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக ராதிகாவை மனதார பாராட்டுகிறார் ப்ரியா.
படத்தின் பாடல்கள் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வந்துள்ள பாடல்கள் ஏற்கனவே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டன.
படம் குறித்து சத்யராஜ் கூறுகையில், இந்தப் படத்தில் நடித்தது ஒரு புதிய அனுபவம். நல்ல பரீட்சார்த்த முயற்சி இது. நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
ப்ரியா கூறுகையில், எனது முதல் படமான கண்ட நாள் முதல் படத்தை விட ரொம்பவும் வித்தியாசமான படமாக இது இருக்கும். சத்யராஜ், ஸ்ரீபிரியா, ராதிகா ஆகிய மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகும்.
இதுபோன்ற கலைஞர்களை இயக்கியதை பெருமையாக கருதுகிறேன். இதில் ஸ்ரீபிரியா மேடம் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என்றார்.
பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து, தமிழ் திரையுலகில் நிலையான இடத்தை நோக்கி நகர்ந்து வரும் பிருத்விராஜ், இப்படத்தில் இளம் காதலன் வேடத்தில் பொருத்தமாக நடித்துள்ளாராம். அவருக்கும் சந்தியாவுக்கும், ஜோடிப் பொருத்தம் அமோகம் எனக் கூறுகிறார்கள்.
கடந்த வாரம்தான் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகிறதாம். தீபாவளிக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











