அஜய் தேவ்கன் விவகாரம்.. அடக்கி வாசித்த கோலிவுட் பிரபலங்கள்.. படம் வந்தா மட்டும் தான் பொங்குவோம்!
சென்னை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 'இந்தி தான் தேசிய மொழி' என்றும் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து ரிலீஸ் பண்றீங்க என கிச்சா சுதீப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையே பார்த்துத் தான் கேட்டுள்ளார்.
ஆனால், கன்னட திரையுலகில் அதற்கு வெளியான எதிர்ப்பு அளவுக்கு கூட கோலிவுட்டில் ஒரு சிலரை தவிர முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் யாருமே வாய் திறக்கவில்லையே என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களும் இந்தியில் டப் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய மொழி பிரச்சனை
வட இந்தியாவிலேயே மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளம், மணிப்புரி, சமஸ்கிருதம், சிந்தி என பல மொழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகள் உள்ளன. மதத்தை வைத்தும் இனத்தை வைத்தும் பாகுபாடு பார்த்தது போல அடுத்ததாக மொழியை வைத்து இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையை சினிமாக்காரர்களே கொண்டு வருவது ஏற்க முடியாத ஒரு விஷயம் என பலரும் அஜய் தேவ்கனின் கருத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சில பிரபலங்கள் கேள்வி
இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகைகள் ரம்யா, கஸ்தூரி, பாடகி சின்மயி போன்ற வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடிகர் அஜய் தேவ்கன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றபடி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் இந்த விவகாரத்தில் அமைதி காத்தது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் முன் வைத்துள்ளனர்.

பாலிவுட்டில் பாராட்டு
அஜய் தேவ்கனுக்கு எதிராக ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழுந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் அப்படியொரு பிரச்சனை நடந்ததையே மறந்து விட்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி உள்ள ரன்வே 34 படத்தை பாராட்டி வருகின்றனர். ஆனால், விமர்சன ரீதியாக பலத்த அடியை இந்த படம் வாங்கி உள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் நாளை தெரிந்து விடும்.

புரமோஷனுக்குத்தான் அந்த ட்வீட்டே
தனது புதிய படமான ரன்வே 34 திரைப்படத்தை புரமோஷன் பண்ணும் நோக்கில் தான் இப்படியொரு பஞ்சாயத்தை அஜய் தேவ்கன் ஆரம்பித்து வைத்தார் என்றும் அவரது படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், கன்னட சினிமா விழாவில் கிச்சா சுதீப் பேசியதற்கு அஜய் தேவ்கன் எதிர்வினை ஆற்றி இருக்க மாட்டார் என்றே நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அமைதியோ அமைதி
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் படத்தை பாராட்டி வரும் நிலையில், தென்னிந்திய நடிகர்களும் குறிப்பாக கோலிவுட்டின் சினிமா பிரபலங்களும் இந்த பிரச்சனைக்கு ஏன் கொதித்தெழ வில்லை என்கிற கேள்வியும், தங்கள் புதிய படங்கள் ரிலீஸ் ஆக இருந்தால் பொங்கி இருப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு விளாசி வருகின்றனர்.

நீங்க டப்பிங் பண்ணலயா
கோலிவுட் படங்களும் சமீப காலமாக இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வரும் சூழலில் இதற்கு உங்கள் கருத்தை கூடவா தெரிவிக்க முடியாது என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். சமீபத்தில், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களும் இந்தியில் டப் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











