ஓடுபவை பெரிய படங்கள்.. ஓடாதவை சின்னப் படங்கள்! - கே எஸ் ரவிக்குமார்

சிவன் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கோட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா போர்ஃபிரேம் தியேட்டரில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
விழாவில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார்.
தனது வாழ்த்துரையில் அவர் கூறியது:
சினிமா வாழ்க்கையில் ஒரு தொடர்பு கிடைப்பது ரொம்ப அவசியம். எனக்கு ராஜேந்திரகுமார் லிங்க் கிடைத்ததால்தான் இந்த நிலைக்கு வந்தேன். அதற்கு முன் பத்து வருடங்கள் உதவி இயக்குனராகவே இருந்தேன். அப்போது ஒருவர் வேலைக்காரி படத்தில் இருந்து முப்பது வருடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொன்னார்.
வாழ்க்கை முழுவதும் உதவி இயக்குனராகவே கழிந்து விடுவோமோ என்று பயந்தேன். உடனே சினிமாவை விட்டு விலகினேன். அப்பாகிட்ட பணம் வாங்கி தொழில் ஆரம்பித்தேன். திருமணமும் கூட முடிந்தது.
அப்போதுதான் ராஜேந்திரகுமார் வந்து மீண்டும் சினிமாவுக்கு அழைத்தார். நான் மறுத்தேன். அவர் திரும்ப திரும்ப வற்புறுத்தி அழைத்து போய் புதுவசந்தம் படத்தில் விக்ரமனுடன் சேர்த்து விட்டார். அந்த படம் மூலம் ஆர்.பி. சவுத்ரி, லிங்க் கிடைத்தது. பிறகு புரியாத புதிர் படம் இயக்க வாய்ப்பு வந்தது. அப்படித்தான் நான் வளர்ந்தேன்.
கோட்டி படத்தில் இயக்குனரே நடிக்கிறார். இயக்குனர்கள் கதாநாயகர்களாக நடிப்பது தவறல்ல. நடிப்பு சொல்லி கொடுப்பவர்கள் இயக்குனர்கள்தான். அவர்களுக்கு நடிப்பு தெரியும் நன்றாக நடிப்பார்கள். ஆனால் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் பாகுபாடுகள் இல்லை. ஓடும் படங்கள் எல்லாம் பெரிய படங்களே... ஓடாதவை சின்ன படங்கள்..." என்றார்.
கோட்டி படத்தின் இசையமைப்பாளர் குரு கல்யாண், தயாரிப்பாளர் சதீஷ்குமார், நாயகி பாக்யாஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பாளர் விகே சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.


Click it and Unblock the Notifications











