'தாய்' - ராதிகாவுக்குப் பதில் குஷ்பு
கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகும் தாய் காவியம் திரைப்படத்தில் தாய் கேரக்டரில் நடிப்பதாக இருந்த ராதிகா மாற்றப்பட்டு குஷ்பு சேர்க்கப்பட்டுள்ளார்.
| Click here for more images |
ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி நூறாண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவல் தாய். இந்த நாவலை கலைஞர் கருணாநிதி, தாய் காவியம் என்ற பெயரில் தமிழ் நடைக்கு மாற்றியுள்ளார்.
இந்தக் காவியம் தற்போது திரைப்படமாகிறது. பா.விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு நாயகிகளாக கீர்த்தி சாவ்லா, அக்சயா நடிக்கவுள்ளனர். பாலி ஸ்ரீரங்கம் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஹீரோவின் தாய் வேடத்தில் ராதிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கலைஞரே ராதிகாவே போடலாம் என பரிந்துரைத்தாராம். இந்த நிலையில், ராதிகா சில காரணங்களுக்காக இப்படத்திலிருந்து விலகியுள்ளாராம். இதைத் தொடர்ந்து அவரது இடத்தில் குஷ்புவை நடிக்க வைக்கவுள்ளனர்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து ெகாண்டு படத்தைத் தொடங்கி வைத்தார்.
கருணாநிதி பேசுகையில், தாய் காவியம் மூலம் கவிஞர் பா.விஜய் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிகச் சிறந்த இடத்தை அவர் பிடிப்பார்.
தற்போதைய கால கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான கதைதான் இது. நாயகன் பாவல் வேடத்தில் பா.விஜய் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாவலின் தாயார் வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். பெரியார் படத்தில் அவர் மணியம்மையாக நடித்ததைப் பார்த்தபோதே அவரது திறமையை நான் புரிந்து கொண்டேன். இந்தப் படத்திலும் அவர் சிறப்பாக நடிப்பார் என்று நம்புகிறேன்.
அந்தக் காலத்தில் நான் கதை வசனம் எழுதிய படங்களில் எல்லாம் எனது புரட்சிகரமான வசனங்களை எடிட் செய்யாமல் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியதே இல்லை.
ஆனால் இப்போது சென்சார் போர்டு அதிகாரிகள் அதுபோல நடந்து கொள்வதில்லை. நியாயமாக உள்ளனர். ஆனால் அப்போது அப்படி இல்லை. அந்த அளவுக்கு சென்சார் போர்டின் கெடுபிடிகள் இருந்தன. சில சென்சார் போர்டு அதிகாரிகள் கையில் கத்திரியுடன் வரும் அளவுக்கு நிலைமை இருந்தது என்றார்.
இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வாலி, ஏவி.எம். சரவணன் நிகழ்ச்சியில் பேசினர். நடிகை குஷ்புவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னதாக தஞ்சையைச் சேர்ந்த ஒரு நகைக் கடை உரிமையாளர் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்து தன்னையும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மேடையில் கோரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications











